’உலகம் அழியப்போகுது... எல்லோரும் ஒண்ணு சேருங்க... பதறித் துடிக்கும் பாமக ராமதாஸ்..!
உலகம் அழியும் நிலையில் இருப்பதால் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட தயாராக வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
உலகம் அழியும் நிலையில் இருப்பதால் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட தயாராக வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’’இந்தியா உள்ளிட்ட ஒட்டுமொத்த உலகிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. காலநிலை மாற்றம் என்றால் என்ன? அதன் தீய விளைவுகள் என்னென்ன? என்பது குறித்த விழிப்புணர்வு நமது மக்களிடம் இல்லை. ஆகவே, இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காலநிலை மாற்றம் என்ற பிரச்சினை, அதற்கான தீர்வு, அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எனது முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் இன்று முதல் தினமும் சிறிய அளவில் எழுதப் போகிறேன். அதற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறேன்.
உலகிற்கான ஆறாவது பேரழிவும், அதைத் தடுப்பதற்கான வழிகளும்!
உலகின் ஆறாவது மனிதப் பேரழிவு என்றால் என்ன? அதை எவ்வாறு தடுக்க முடியும்?
உலக மக்கள் அனைவரும் மாபெரும் பேராபத்தில் சிக்கியுள்ளனர். புவிவெப்பம் அதிகரிப்பதால் ஒட்டுமொத்த மனித குலமும் அழிவின் விளிம்பில் நிற்கிறது. இது பூமியின் ஆறாவது உயிரினப்பேரழிவு என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு விண்கல் பூமியில் விழுந்து ஐந்தாவது உயிரினப்பேரழிவு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
பெரும் வறட்சி, அனல் காற்று, பெரும் வெள்ளம், அதிவேக புயல், தண்ணீர் தட்டுப்பாடு, புதிய புதிய நோய்கள், பொருளாதார பாதிப்பு, வன்முறை எனப் பலப்பல பெரும் கேடுகளுக்கு புவிவெப்பமடைதல் காரணமாகும். புவிவெப்பமடைதலால் அதிகம் பாதிக்கும் பகுதியாக தமிழ்நாடு உள்ளது. வரும் ஆண்டுகளில் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்லும்.
புவிவெப்பமடைதல் பேராபத்தை தடுக்க, உலகின் ஒவ்வொரு அரசாங்கமும், ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு நிறுவனமும் அவசரநிலை நடவடிகைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். அடுத்த ஒருசில ஆண்டுகளுக்குள் உலகின் போக்கை தலைக்கீழாக நாம் மாற்றாவிட்டால், நமக்கும் நமது குழந்தைகளுக்கும் பாதுகாப்பான உலகம் இருக்காது.
அடுத்த 11 ஆண்டுகளுக்குள், அதாவது 2030 ஆம் ஆண்டுக்குள் உலகினை தலைக்கீழாக மாற்ற வேண்டும் என ஐநா அறிவியலாளர்கள் மிறிசிசி குழு அறிவித்துள்ளது. அதற்கான மிகவேகமான நடவடிக்கைகளை 2020 ஆம் ஆண்டில், முழுவேகத்தில் தொடங்கினால் மட்டுமே உலகின் அழிவை தடுக்க முடியும் என எச்சரித்துள்ளது. அதாவது, இப்போதே தொடங்கி, அடுத்த 11 ஆண்டுகளுக்குள் எல்லாவற்றையும் மாற்றினால் மட்டுமே - உலகம் அழிவதை தடுக்க முடியும். இது அறிவியல் பூர்வமான உண்மை ஆகும்.
எல்லோரும் ஒன்று சேர்ந்து உடனடியாக செயல்பட வேண்டிய அவசர காலம் இதுவாகும். எனவே, மத்திய மாநில அரசுகள், உள்ளாட்சி அரசுகள், பொது அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் அனைத்தும் காலநிலை அவசரநிலை பிரகடனத்தை அறிவிக்க வேண்டும் என பசுமைத் தாயகம் அமைப்பு கோருகிறது.