திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தார். 

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி?

திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தார். அதனைத் தொடர்ந்து உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று அவ்வப்போது அமைச்சர்கள் தொடர்ந்து பேட்டி அளித்து வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு அமைச்சர் மூர்த்தி, உதயநிதி அமைச்சராவார் என்று தெரிவித்திருந்தார். மேலும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்த பிறகு உதயநிதி அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் வருகின்றன.

பேருந்துகள் இயக்க நடவடிக்கை

இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், உதயநிதி அமைச்சரானால் சிறப்பாக செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார். சேப்பாக்கம் தொகுதியில் இருந்து புதிய வழித் தடத்தில் பேருந்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். பின்னார் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சென்னையில் எந்தெந்தப் பகுதிகளில் பள்ளி மாணவர்கள் செல்ல பேருந்துகள் இல்லையோ அங்கெல்லாம் பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து போதிய பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இரவு பேருந்துகள் போதுமான அளவு இயக்கப்படாத தடங்களைக் கண்டறிந்து பழையபடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆவலில் தமிழக அமைச்சர்

சென்னை மாநகராட்சியில் பேருந்து வசதிகள் இல்லாத இடங்களில் சிற்றுந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கைக்கு முதல்வர் நடவடிக்கை எடுப்பார். இன்று மிகச்சிறந்த சட்டப்பேரவை உறுப்பினராக உதயநிதி செய்யும் பணியை மக்கள் பார்க்கிறார்கள். அவர் அமைச்சரானால் மிகச் சிறப்பாக செயல்படுவார். அவர் அமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கையை நானும் முன் வைக்கிறேன். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக முதல்வர் நடவடிக்கை எடுப்பார். அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.