அதிமுக ஹாட்ரிக் வெற்றி அடிக்கப்போவுது... ஜெ. ஆட்சி தொடரப்போவது... அடிச்சுக் கூறும் தமிழக அமைச்சர்.!
அதிமுக ஹாட்ரிக் வெற்றியாக 3-வது முறையும் மாபெரும் வெற்றி பெறும். ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் தொடரும் நிலையே ஏற்படும் என்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அதிமுக ஆட்சி மீண்டும் தொடரவே மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதிமுக ஹாட்ரிக் வெற்றியாக 3வது முறையும் மாபெரும் வெற்றி பெறும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் தொடரும் நிலையே ஏற்படும்.
தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றபோது கொரோனா தொற்று அதிகளவில் இல்லை. ஆனால், தேர்தல் நடைபெறாத மாநிலங்களில்தான் அதிகளவு கொடோனா தொற்று எண்ணிக்கை உள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையம் பல விதிமுறைகளை தெரிவித்துள்ளது. அதையெல்லாம் நாங்கள் முறையாக கடைபிடிப்போம். காலத்தின் கட்டாயத்துக்காகத்தான் ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட்டை திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை விவாத பொருளாக ஆக்காமல் இருப்பதே நல்லது” என்று கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.