பாகிஸ்தான் குடியரசு தினம் - வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த முஸ்லீம் பெண் கைது - கர்நாடகாவில் பரபரப்பு..!
கர்நாடக மாநிலத்தின் பகல்கோட் பகுதியை சேர்ந்த குத்மா ஷேக் இவ்வாறு செய்ததற்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
தொழில்நுட்பம் வளர வளர எவ்வளவு நன்மைகள் ஏற்படுகிறதோ அதே அளவு தீமைகளும் அவைகளால் அரங்கறி வருகின்றன. வாட்ஸ்அப் செயலி நம் சொந்தங்களுடன் எப்போதும் இணைப்பில் இருக்க செய்யும் நோக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. துவக்கத்தில் குறுந்தகவல் செயலியாக பார்க்கப்பட்ட வாட்ஸ்அப் செயலியில் பரவும் தகவல்களால் தற்போது பல்வேறு குற்ற செயல்கள் அரங்கேறி வருகின்றன.
பாகிஸ்தான் குடியரசு தினம்:
அந்த வகையில், பாகிஸ்தான் குடியரசு தினத்தன்று 25 வயது பெண் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-இல் அந்நாட்டுக்கு ஆதரவான கருத்துக்கள் அடங்கிய வாசகங்கள் கொண்ட வாழ்த்து செய்திகளை ஸ்டேட்டஸ் ஆக வைத்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். கர்நாடக மாநிலத்தின் பகல்கோட் பகுதியை சேர்ந்த குத்மா ஷேக் இவ்வாறு செய்ததற்கு கைது செய்யப்பட்டுள்ளார். பகல்கோட் பகுதியில் உள்ள முதூல் டவுனில் வசித்து வரும் குத்மா ஷேக் அங்குள்ள மதரசா மாணவர் ஆவார்.
மார்ச் 23 ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. இதே தினத்தன்று பாகிஸ்தான் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. "பாகிஸ்தான் குடியரசு தின வாழ்த்தைக்களை தெரிவிக்கும் ஸ்டேட்டஸ்-ஐ இவர் கடந்த புதன் கிழமை வைத்திருக்கிறார். இவரது ஸ்டேட்டஸ்-ஐ பார்த்த அருன் பஜந்த்ரி, தகுந்த ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரின் புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது," என காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வாழ்த்து செய்தி:
காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் புகைப்படங்களின் படி குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் நபரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-இல் "அல்லாஹ் ஒவ்வொரு நாட்டிலும் அமைதி, ஒற்றுமையை ஓங்க செய்யட்டும்," என கூறும் தகவலை உருது மொழியில் பதிவிட்டு இருந்தார். இத்துடன் பாகிஸ்தான் குடியரசு தினத்தை குறிக்கும் வாழ்த்து செய்தி அடங்கிய புகைப்படம் ஒன்றையும் ஸ்டேட்டஸ்-இல் வைத்து இருக்கிறார்.
பாகிஸ்தான் குடியரசு தின வாழ்த்துக்களை ஸ்டேட்டஸ் ஆக வைத்த பெண் மீது முதூல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153A (பேச்சு, எழுத்து,சைகை அல்லது மத, இன, மொழி, சாதி, சமயம் தொடர்பாக விரோத உணர்ச்சிகளை தூண்டிவிட முயற்சி செய்தல்) மற்றும் 505 (2) (விரோதம், எதிர்ப்பு அல்லது இரு பிரிவினரிடையே வெறுப்பு உணர்வுகளை உருவாக்கும், வளர்க்க முயற்சி செய்தல்) போன்ற பிரிவுகளில் வழக்கப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.