வில்லனுக்கு பேரு வச்சா என்ன தப்பு.. குரு சுதந்திர போராட்ட தியாகியா.? சவுக்கு சங்கர் அதகளம்.
அதேபோல், அந்தோணி சாமி பாத்திரத்திற்கு ஏன் குரு என பெயர் வைத்தீர்கள் என கேட்கிறீர்கள், அந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு குரு என பெயர் வைத்தால் என்ன தவறு இருக்க முடியும், காலம் சென்ற குரு அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்திற்காக அந்தமான் சிறையில் இருந்தவரா?
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் வில்லன் கதாப்பாத்திரத்திற்கு ஜே. குருவின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சூர்யா பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாமக போராட்டம் நடத்தி வரும் நிலையில் வில்லன் கதாபாத்திரத்திற்கு குரு என பெயர் வைத்தால் என்ன? குரு சுதந்திர போராட்ட தியாகியா என கேள்வி அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கேள்வி எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெய் பீம்க்கு எதிராக தற்போது நடந்து கொண்டிருக்கும் அனைத்து விஷயங்களுக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் தான் காரணம் என்றும், ராமதாசும் பாமாகவும் தான் ஒட்டுமொத்த வன்னிய சமுதாயத்தின் பிரதிநிதியா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம், இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர் ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின் அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக குரல் எழுப்பி வருகிறது. இதனால் சூர்யாவுக்கும் -பாமகவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக ஊடகவியலாளர், அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தற்போது நடந்து கொண்டிருக்கும் அனைத்து விஷயங்களும் பாமக நிறுவனர் ராமதாஸ் தான் காரணம், வன்னியர்கள் புண்பட்டுள்ளதாக கூறுவதற்கு ராமதாசும், பாமகவும்தான் ஒட்டுமொத்த வன்னிய சமுதாயத்தின் பிரதிநிதியா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த படத்தில் 10 நொடிகளுக்கு ஒரு காலண்டர் வைத்து விட்டதால் வன்னியர் சமூகம் காயப்பட்டு விட்டது என கூறுகிறார்கள் அது அபத்தாமக இல்லையா.? சூர்யா 5 கோடி இழப்பீடு கொடுத்தால் அதை நாங்கள் பார்வதி அம்மாவுக்கு கொடுப்போம் என்கிறார்கள் பல ஆண்டுகளாக பார்வதி அம்மாள் அதே இடத்தில்தான் இருக்கிறார்கள் அவருக்கு இதுவரை நீங்கள் என்ன செய்தீர்கள்.? அவ்வளவு ஏன் ஏழை ஏளிய வன்னிய மக்களுக்கு பாமக என்ன செய்தது.?
அதேபோல், அந்தோணி சாமி பாத்திரத்திற்கு ஏன் குரு என பெயர் வைத்தீர்கள் என கேட்கிறீர்கள், அந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு குரு என பெயர் வைத்தால் என்ன தவறு இருக்க முடியும், காலம் சென்ற குரு அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்திற்காக அந்தமான் சிறையில் இருந்தவரா? அல்லது மொழி போருக்காக உண்ணாவிரதமிருந்து சொத்துக்களை இழந்தாரா? வருடாவருடன் குரு சித்திரை திருவிழாவில் என்னவெல்லாம் பேசினார் என்று அனைவருக்கும் தெரியும். அதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பற்றி கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் கூடியிருந்த மாநாட்டில் சொல்லவே வாய் கூசும் அளவிற்கு அவர் பேசினாரே, ஒரு மாவட்ட ஆட்சியரை உள்ளே காலடி எடுத்து வைத்தால் வெட்டுவேன் குத்துவேன் என்று பேசியவர்தானே குரு. அவரின் வன்முறை பேச்சுக்கு அதிக உதாரணங்களை என்னால் சொல்ல முடியும், அப்படிப்பட்ட நபரை நீங்கள் கதாநாயகனாக கொண்டாடுகிறீர்கள். அசல் நிறத்தை, ஒரு குறியீட்டை படத்தில் வைத்தால் என்ன தவறு இருக்கிறது. ஜெ. குரு என்றே பெயர் வைத்தாலும் அதில் ஒன்றும் தவறு இல்லை. அதனால்தான் நான் தொடர்ந்து சூர்யாவுக்கு ஒரு கருத்தைப் வலியுறுத்தி வருகிறேன்,அந்த திரைப்படத்திலிருந்து அக்னிசட்டி காட்சியை எடுத்தது தவறு என்றுதான் நான் கூறிவருகிறேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.