பள்ளிகளில் ஒழுங்கீனங்களில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறைக்கு கல்வியாளர் தேவநேயன் அரசு கேள்வி எழுப்பியுள்ளார். 

பள்ளிகளில் ஒழுங்கீனங்களில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறைக்கு கல்வியாளர் தேவநேயன் அரசு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக பள்ளிகளில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் வகுப்பறையில் செய்யும் செயல்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றனர். மேலும் மாணவர்கள் ஆசிரியர்களை தாக்குவதும், அவர்களை மிரட்டுவது, கிண்டல் செய்வது போன்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் என்றால் மறுபுறம் வகுப்பறையில் மாணவிக்கு மாணவர் தாலி கட்டுவது, வகுப்பறையில் ரீல்ஸ் செய்வது போன்ற வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் அதிகரித்து வருகிறது. இதனை கண்ட பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு இதுபோன்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதுக்குறித்து சட்டப்பேரவையில் இன்று பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ஒழுக்கக்கேடாக நடந்துகொள்ளும் மாணவர்களின் சான்றிதழில், ஒழுங்கீனமாக நடந்து கொண்டீர்கள் என பதிவிடப்படும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும், பள்ளி வகுப்புகளில் கைப்பேசி கொண்டு வருவது முற்றிலும் தடுக்கப்படும். வகுப்பறையில் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் நிரந்தரமாக பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பு தவறானது என்று கல்வியாளர் தேவநேயன் அரசு தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது ஃபேஸ்புக் பதிவில், இது தவறான அறிவிப்பு. மாணவர்கள் தவறு செய்தால் அதை சரி செய்வது தான் சரி. அதற்காக தண்டனை வழங்குவது சரியல்ல. இதனால் குழந்தைகள் இடைவிலகல் ஆவார்கள். இப்படி விலகலான குழந்தைகள்தான் பல்வேறு வன்முறைகளுக்கு ஆட்படுபவர்களாகவும் வன்முறையாளர்களாகவும் மாறுகிறார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்படுவர்கள் விளிம்பு நிலை குழந்தைகளே. பள்ளிகளில் ஆசிரியர்கள் பல்வேறு விதமான ஒழுங்கீனங்களில் ஈடுபடுகிறார்கள்.

அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது? அவர்கள் அதே பள்ளியில் தொடரலாம், மாணவர்கள் மட்டும் தொடரக்கூடாது என்பது எப்படி சரியாகும். தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது பாலியல் வன்முறை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை, என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்கள் பாலியல் வன்முறை செய்தால் அரசாணை எண் 121 , 2012 படி அவர்கள் பணிநீக்கம் செய்யப் பட வேண்டும். மேலும் அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் கேன்சல் செய்யப்படும். இந்த அரசாணை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அரசு தெளிவுப்படுத்த வேண்டும். தயவு செய்து குழந்தைகளை குற்றவாளி ஆக்காதீர். நெறிப்படுத்துவோம். எனவே குழந்தைகளின் சிறந்த நலன் அடிப்படையில் இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.