ஊழலே நடக்கலைன்னா... உச்ச நீதிமன்றம் ஏன் லைசென்ஸ்களை ரத்து செய்தது..?
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 14 பேரையும் விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி இன்று தீர்ப்பளித்தார். 105 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்களை போதிய ஆதாரத்துடன் நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டது என்று கூறி, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.
இந்நிலையில், 2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு காங்கிரஸ் கூட்டணி அரசின் நேர்மைக்கான சான்று அல்ல எனக் கூறியுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, முறைகேடு நடந்ததால்தான் 122 உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது என்று விமர்சனம் செய்தார்.
இந்தத் தீர்ப்பு குறித்து அவர் தெரிவித்த கருத்தில், ‘‘2ஜி ஒதுக்கீட்டில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் கொள்கை முடிவு நேர்மையற்றது என உச்ச நீதிமன்றம் முன்பு தெரிவித்தது. முறைகேடு நடந்ததால்தான் 122 உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. 2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் நேர்மைக்கான சான்று அல்ல. முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் கொள்கையால்தான் நாட்டிற்கு இழப்பு ஏற்பட்டது. 2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்’’ என அருண் ஜேட்லி கூறினார்.
சிபிஐ., நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனியும், சிபிஐ.,யால் இந்தக் குற்றத்தை போதுமான சான்றுகளுடன் நிரூபிக்க இயலவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, சிபிஐ., சமர்ப்பித்த சான்றுகள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகக் கூறப்படும் குற்றத்தை நிரூபிக்கப் போதுமானதாக தான் கருதவில்லை என்றுதான் பொருளாகிறது. அப்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருதியிருந்தால், ஏன் 2ஜி முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கருதப் பட்ட நிறுவனங்களின் 122 உரிமங்களை ரத்து செய்தது என்ற கேள்வி இப்போது பரவலாக எழுந்துள்ளது.
அவ்வாறு ரத்து செய்யப்பட்ட 122 உரிமங்களும் இப்போது என்ன ஆகும்? அல்லது இந்த உரிமங்களை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் செயல்தான் என்ன ஆகும்? இந்தக் கேள்விகளும் எழாமல் இல்லை!