தமிழர்களுக்காக என்ன செய்தார் சீமான்..? சீமானை நம்பாதீர்கள் இளைஞர்களே.. வைகோ சீற்றம்.!
தமிழர்களுக்காக ஒன்றுமே செய்யாதவர் சீமான். அவரை நம்பி இளைஞர்கள் ஏமாற வேண்டாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
கடந்த 1993-ஆம் ஆண்டில் திமுகவிலிருந்து வைகோ நீக்கப்பட்ட பிறகு, அவருக்காக உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் வைகோ பேசுகையில், “வை.கோபால்சாமி என்ற என்னுடைய பெயரை வைகோ என்று மாற்றியவர் கருணாநிதிதான். திமுகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கட்சிக்காக அயராமல் பணி செய்தேன். அரசியலில் நான் சந்தித்த இன்னல்கள் அதிகம். அதை என்னுடைய மகன் துரை வைகோவும் சந்திக்க வேண்டுமா என்பதற்காகவே அவர் அரசியலுக்கு வர வேண்டாம் என்று சொன்னேன்.
இப்போது அரசியலே வியாபாரமாகி விட்டது. விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 2 நிமிடங்கள் கூட சந்தித்தது கிடையாது. தமிழர்களுக்காக ஒன்றுமே செய்யாதவர் சீமான். அவரை நம்பி இளைஞர்கள் ஏமாற வேண்டாம். மதிமுகவை நான் மீண்டும் கம்பீரமாக தூக்கி நிறுத்துவேன். இக்கட்சிக்காக நான் மட்டுமல்ல, என்னுடைய குடும்பமும் பல இன்னல்களை சந்தித்திருக்கிறது. என்றாலும், என்னை நம்பி கட்சியில் தொடர்ந்து பயணிக்கும் தோழர்களும் தொண்டர்களும் கட்சியில் உள்ளனர். அவர்களுக்காக மீண்டும் புதிய வேகத்துடன் பணியாற்றி மதிமுகவை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்வேன்.” என்று வைகோ பேசினார்.