பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அனைத்துத் தலைவர்களும் பல நாட்களாக மேற்கு வங்காளத்தில் முகாமிட்டு எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வருத்தத்தைத் தருகிறது. 88 வயதான அவர், விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும். இந்திய மக்களின் சார்பாக நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்தியாவின் நிதி அமைச்சராகவும், 10 ஆண்டுகள் பிரதமராகவும் பொறுப்பேற்று, புதிய பொருளாதாரக் கொள்கையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தி, நாட்டை உலக நாடுகளுக்கு இணையாக வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் டாக்டர் மன்மோகன் சிங்.

உலகத் தலைவர்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்ற மன்மோகன் சிங், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்திருந்தார். அதில், தடுப்பூசி தட்டுப்பாடில்லாமல் கிடைக்க வேண்டும். 18 வயது நிரம்பிய எல்லோருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இக்கோரிக்கையில் சிலவற்றை மத்திய அரசு உடனே நிறைவேற்றியுள்ளது. அவர் கூறிய யோசனைகளை நிறைவேற்ற பாஜக அரசு முயற்சிக்க வேண்டும். ஆனால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மன்மோகன் சிங்குக்கு எழுதிய பதில் கடிதம், தரம் தாழ்ந்து மலிவான அரசியல் உள்நோக்கத்தோடு எழுதியிருக்கிறார். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்..

