சிரிக்காதீங்க தமிழர்களே ப்ளீஸ்: கோதாவரி நீரை கிருஷ்ணா நதி வழியே தமிழகத்திற்குள் கொண்டு வருவோம்- மோடி அரசின் மெகா திட்டம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்துக்கு கடும் துரோகத்தை செய்துவிட்டார் மோடி! தப்பித்தவறி ஒரு கவுன்சிலர் சீட் கூட அக்கட்சிக்கு இந்த மண்ணில் கிடைக்காது. பி.ஜே.பி.யோடு நேரடி மற்றும் மறைமுக கூட்டணியிலிருக்கும் எவருக்கும் டிபாசிட் கூட கிடைக்க விடமாட்டோம்!...என்று தமிழகத்தில் உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒன்று களமிறங்கி கன்னாபின்னாவென பணியாற்றி வருகிறது.
இந்நிலையில் தங்கள் கட்சிக்கு ஆதரவான விஷயங்களை எடுத்து வைத்து வருகிறார் இல.கணேசன். அவர்...”காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதுதான் தமிழக பி.ஜே.பி.யின் நோக்கமும். கட்கரியை சந்தித்து இதையே வலியுறுத்தியுள்ளோம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் மத்திய அரசு விரும்புகிறது, செயலாற்றுகிறது. ஆனால் பலர் இதை கொச்சைப்படுத்துகிறார்கள்.
தமிழக வளர்ச்சியில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை! என்று வீணான வதந்தியை பரப்புகிறார்கள். சமீபத்தில் தமிழகத்துக்கு வருகை தந்திருந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நதி நீர் இணைப்பு திட்டத்தை பற்றி குறிப்பிட்டார். அதன் படி, கோதாவரி ஆற்றில் இருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை, கிருஷ்ணா நதிக்கு கொண்டு வந்து அங்கிருந்து நேரடியாக தமிழகத்துகு கொண்டு வரமுடியும்! என்று அறிவித்திருக்கிறார்.
இது வெற்று வார்த்தையில்லை. நம்பகமான ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட விஷயம். இதையெல்லாம் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.
அதேவேளையில் தமிழக அரசை மத்திய அரசுதான் ஆட்டுவிக்கிறது, வழி நடத்துகிறது எனும் குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுக்கிறேன்.” என்று எடுத்துவிட்டுள்ளார் தன் பங்குக்கு.
ஆவ்!....என்னா தூக்கம்!....