சசிகலா துணை வந்தால்தான் அதிமுக மீண்டெழும் என்ற நிலையெல்லாம் இங்கு இல்லை என்று திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.
மதுரை ஆலங்குளத்தில் அதிமுக கிழக்கு கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் விவாதிக்கப்பட்டது. பின்னர் ராஜன் செல்லப்பா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் 3 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில்தான் திமுக வெற்றி பெற்றது.

46 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் அதிமுக வெற்றிவாய்ப்பை இழந்தது. அதைக் கருத்தில் கொண்டு தொண்டர்கள் தீவிர களப்பணியாற்ற வேண்டும். அப்படி பணியாற்றினால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி. உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது. கட்சி தலைமை எடுக்கும் முடிவை முழுமனதாக ஏற்று தேர்தலில் பணியாற்றி வெற்றி காண்போம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைத்த மிகப்பெரிய கட்டமைப்புடன் அதிமுக உள்ளது. எனவே சசிகலாவின் தயவு அதிமுகவுக்கு உள்ளாட்சித் தேர்தலில் தேவைப்படாது. சசிகலா துணை வந்தால்தான் அதிமுக மீண்டெழும் என்ற நிலையெல்லாம் இங்கு இல்லை” என்று ராஜன் செல்லப்பா பேசினார்.
