We do not know how our Chief Minister died by simbu

நம் நாட்டின் முதலமைச்சர் எப்படி இறந்தார் என நமக்குத் தெரியாது. அப்படிப்பட்ட சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம் என்று நடிகர் சிம்பு பேசியிருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நடிகர் விவேக் - தேவயானி நடிப்பில் வெளிவர இருக்கும் ‘எழுமின்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் விஷால் , சிம்பு, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சமீபத்தில் வெளியான உரு படத்தின் தயாரிப்பாளரான வி.பி.விஜி எழுமின் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளை வைத்து தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்கும் படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில், விவேக் மற்றும் தேவயானி இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிம்பு, முதலில் தனது ரசிகர்களுக்குத் தேவையானதைப் பேசி அவர்களுக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்தார். அதற்குமுன்பாக காலத்தாமதமாக வரும் தனது வழக்கத்தை மாற்றிக்கொள்வதாகவும் உறுதியளித்தார். “4 பேர் கை தட்டினால் போதும் நான் இனிமேல் நல்ல படங்களை கொடுப்பேன். ஆனால், தயவு செய்து ரசிகர்கள் கட்-கவுட் வைப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். உயிரை பறிக்கும் கட்-அவுட்கள் எனக்குத் தேவையில்லை” என்று கூறினார்.

அதன்பின் படத்தின் கான்செப்டுக்குள் நுழைந்தவர் “இது குழந்தைகள் சம்மந்தமான படம் என்பதால் இதை சொல்லியே ஆக வேண்டும். செயினை திருடும் ஒரு குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தையை தண்டிக்கிறோமே தவிற, ஏன் அவன் அப்படி இருக்கிறான் என்று சிந்திக்காத சமூகத்தில்தான் நாம் இருக்கிறோம்.

யார் தலைவன்? இன்றைக்கு யார் தலைவன்? நாளைக்கு யார் தலைவன்? இது யார் கொடி? இது என்ன கொள்கை? அது என்ன கொள்கை? எதுவுமே நமக்குத் தெரியவில்லை. நம்ம நாட்டின் முதலமைச்சர் எப்படி இறந்தார்கள் என்றே தெரியவில்லை. நம்முடைய தலையெழுத்து நமக்கு எப்படித் தெரியும்” என்று அரசியலுக்குள் நுழைந்தவர் அப்படியே யூடர்ன் அடித்து மீண்டும் நிகழ்ச்சியின் கான்செப்டுக்குள் நுழைந்தார்.

”மகன்களிடம் பெண்கள் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தாலே பாலியல் பலாத்காரம் குறையும். நான்தான் நடிகர் சந்தானத்தை சினிமாவில் அறிமுகப்படுத்தினேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. அன்றைய தினம் விவேக் மனசு வைக்கவில்லை என்றால் நடிகர் சந்தானம் இவ்வளவு பெரிய ஆளாக வந்திருக்க முடியாது” என்று கூறினார்.