தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் !! கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அதிரடி !!
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு உதவிடும் வகையில் உள்ளதால் கேரளாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் தற்போது சட்டமாக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் கட்டுப் படுத்த முடியாக அளவுக்கு கலவரம் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற கலவரத்தில் 6 பேரும், கர்நாடகாவில் நடைபெற்ற போராட்டத்தில் 2 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். சென்னை, கேரளா, புதுச்சேரி, பெங்களூரு, லக்னோ, ஐதராபாத், மும்பை உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட இடங்களில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இதே போல் மத்திய பா.ஜ.க அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கேரளாவிலும் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தை ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து நடத்தின..
இந்நிலையில், மத்திய அரசு தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடுத்தாண்டு நடத்த திட்டமிட்டுள்ளது. குடியுரிமைச் சட்டத்திற்காக புதிய மக்கட்தொகை கணக்கெடுப்பு பயன்படுத்தப்படும் என தகவல் பரவியது.. ஆனால் தற்போது, ”தேசிய மக்கட்தொகை கணக்கெடுப்பை கேரளாவில் நடத்தப்போவதில்லை” என்று கேளர அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுவரை நடைபெற்று வந்த தேசிய மக்கட்தொகை கணக்கெடுப்பிற்கு முழு ஒத்துழைப்பை கேரள அரசு வழங்கியுள்ளது. அதேபோல் 2021ம் ஆண்டு நடைபெறவிருக்கும் கணக்கெடுப்பிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார்.
ஆனால், இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு குடியுரிமை சட்டத்தின் பதிவேட்டிற்கு பயன்படுத்தப்படும் என தகவல் கிடைத்தது. எனவே மத்திய அரசின் தேசிய மக்கள் தொகைப் பட்டியலைப் புதுப்பிக்கும் நடவடிக்கையில் கேரள அரசு ஒருபோதும் உதவி செய்யாது என்றும் .
அதனால் மக்கட்தொகை கணக்கெடுப்பிற்கான நடவடிக்கைகளை மாநில அரசு நிறுத்திவைக்கிறது என்றும் பினராயி விஜயன் அதிரடியாக அறிவித்துள்ளார்.