திமுக ஆட்சியின் ஊழல்களை மத்திய அரசுக்கு அனுப்ப போகிறோம்.. அதிரவிடும் ஜெயக்குமார்.. அலறும் உபி-க்கள்.
ஆனால் இப்போது இரவோடு இரவாக சொத்து வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் மக்கள் விரோத ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. ஆட்சி போகின்ற போக்கைப் பார்த்தால் ஐந்து வருட ஆட்சி முடியும்போது கூடுதலாக 5 லட்சம் கோடி கடனாக மாறும்,
திமுக அரசின் ஊழல்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இது திமுகவினர் மத்தியில் கொந்தளிக்கை ஏற்படுத்தியுள்ளது. இரவோடு இரவாக சொத்து வரியை உயர்த்தப்பட்டுள்ளது என்றும் மொத்தத்தில் மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என்றும் ஜெயக்குமார் விமர்சித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் அதை வெகுவாக பாராட்டி வரவேற்று வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுக பாஜக என எதிர்க்கட்சிகள் பல்வேறு விஷயங்களில் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்றும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்ற விமர்சனங்களை இரு கட்சிகளும் வலுவாக எழுப்பி வருகின்றன. இது ஒருபுறமிருக்க தொடர்ந்து திமுக அமைச்சர்கள் மீது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அவர் முதல்வர் ஸ்டாலினையும்கூட விட்டு வைக்கவில்லை. துபாய் சென்ற முதல்வரின் பயணத்தையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் முதலமைச்சரின் துபாய் பயணத்தை விமர்சித்துள்ளனர். அதாவது ஊழல் செய்த 5000 கோடி பணத்தை துபாயில் முதலீடு செய்யவே முதலமைச்சர் தனது குடும்பத்துடன் துபாய் சென்றதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக ஆட்சியின் ஊழல்களை மத்திய அரசுக்கு அனுப்பும் பணி விரைவில் தொடங்கும் என அறிவித்துள்ளார். சமீபத்தில் சிறையில் இருந்து பிணையில் வந்துள்ள அவர் 5-வது நாளாக ராயபுரம் காவல் நிலையத்தில் இன்று கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இரவோடு இரவாக அதிரடியாக சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இது மக்களுக்கு சுமையாக விழுந்துள்ளது. மக்கள் மீது சுமையை ஏற்படுத்தி தான் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் அரசு எதற்கு? தமிழக அரசு பொருளாதார மேதைகளை நியமித்து 300 நாட்கள் ஆகிறது. ஆனால் பொருளாதார நடவடிக்கையை மீட்க எந்தவித நடவடிக்கையும் தற்போதுவரை இல்லை. வரியையும் உயர்த்தாமல் பொருளாதாரத்தையும் மேம்படுத்தியது அதிமுக அரசுதான். அதிமுக ஆட்சியில் எந்த வித கட்டணமும் உயர்த்தப்படவில்லை, ஆனால் வரக்கூடிய நாட்களில் மின் கட்டணம், பஸ் கட்டணம், பால் விலை, பேருந்து கட்டணம் ஆகிய அனைத்து விலைகளும் உயர இருக்கிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் சொத்துவரி உயர்ந்த பரிந்துரைத்த நிலையில் அப்போது ஸ்டாலின் வானுக்கும் மண்ணுக்கும் குதித்தார்.
ஆனால் இப்போது இரவோடு இரவாக சொத்து வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் மக்கள் விரோத ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. ஆட்சி போகின்ற போக்கைப் பார்த்தால் ஐந்து வருட ஆட்சி முடியும்போது கூடுதலாக 5 லட்சம் கோடி கடனாக மாறும், அதிமுக ஆட்சியில் தன்னந்தனியாக இரவு நேரத்தில் பெண்கள் நடமாட முடியும், ஆனால் திமுக ஆட்சியில் பட்டப்பகலிலேயே கொலை, கொள்ளை சம்பவங்கள் நடக்கிறது. மனிதர்கள் சுதந்திரமாக நடமாடிய ஆட்சி அதிமுக ஆட்சிதான். சர்க்காரியா ஆணையம் அமைத்தது போல தற்போதைய திமுக ஆட்சியில் ஊழல்களை ஆதாரத்துடன் தொகுத்து விசாரிக்க மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளோம். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.