" அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானம் போட போறோம்".. பா.வளர்மதி சொன்ன புதிய தகவல்..!
அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பேசி வருகின்றனர். இயக்கத்தின் வளர்ச்சி, தொண்டர்களின் விருப்பம் மற்றும் நிர்வாகிகள் ஒற்றை தலைமை வேண்டும் என விரும்புகின்றனர்.
அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பேசி வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தகவல் தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23-ம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெறவுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம் குறித்து நேற்று முன்தினம் கட்சியின் தலைமை அலுவலகத்ததில் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுகவை வழிநடத்தி செல்ல இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றை தலைமையே சிறந்தது. ஆகையால், வருகிற 23ம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை பதவி முறையை மீண்டும் தீர்மானமாக கொண்டு வர வேண்டும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூறினார்.
மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதிமுக அலுவலகத்துக்கு வெளியில் திரண்டிருந்த தொண்டர்களில் ஒரு தரப்பினா் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என முழக்கமிட்டனா். மற்றொரு தரப்பினர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்க வேண்டும் என முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனால் கட்சியில் மீண்டும் பூகம்பம் வெடித்தது. ஒற்றை தலைமை விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம், நிர்வாகிகள் கூட்டம் முடிந்த பிறகு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதேபோல், எடப்பாடி பழனிசாமியும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடதத்திடினர்.
இந்நிலையில், ஆலோசனைக்கு பிறகு முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி;- அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பேசி வருகின்றனர். இயக்கத்தின் வளர்ச்சி, தொண்டர்களின் விருப்பம் மற்றும் நிர்வாகிகள் ஒற்றை தலைமை வேண்டும் என விரும்புகின்றனர். அந்த ஒற்றை தலைவர் தொண்டர்கள் விரும்பக்கூடிய தலைவராக இருக்க வேண்டும். தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தொண்டராக இருக்க வேண்டும். குழப்பமான இந்த சூழ்நிலையில் யாருக்கு ஆதரவு என்று தெரிவிக்க முடியாது என்று பா. வளர்மதி கூறினார்.