அடிதூள்.. சென்னையில் கொரோனா தொற்று விகிதம் 2.5 சதவீதமாக குறைந்தது .. தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்.
சென்னையில் கொரோனா பரவல் 2.5% ஆக குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
சென்னையில் கொரோனா பரவல் 2.5% ஆக குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் சிகிச்சை பெற்று வருபவர்களில் எண்ணிக்கை நாள் ஒன்றிற்கு ஆயிரத்திற்கும் கீழ் உள்ளது. மேலும் தொற்றை குறைக்க அந்தந்த மண்டலங்களில் அதிக மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாள் ஒன்றிற்கு சராசரியாக 30 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் சென்னையில் 28,281 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 828 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில், சென்னையில் கொரோனா பரவல் 2.5 % ஆக குறைந்துள்ளது. சென்னையில் கடந்த மே மாதம் 10ம் தேதி 26.6% ஆக இருந்த கொரோனா பரவல் படிப்படியாகக் குறைந்து தற்போது 2.5% ஆக இருக்கிறது. கொரோனா இரண்டாம் அலை தொடக்கத்தில் மார்ச் மாதம் 2.5% ஆக இருந்த நிலையில், நாள் ஒன்றிற்கு 13 ஆயிம் நபர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது, நாள் ஒன்றிற்கு 30 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையை பொருத்தவரையில் இதுவரை மொத்தம் 5 லட்சத்து 25 ஆயிரத்து 826 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 லட்சத்து 09 ஆயிரத்து 497 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 8 ஆயிரத்து 475 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதுவரை மொத்தத்தில் 7854 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகாலில் 16,886 நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மொத்தம் தடுப்பூசி செலுத்தப்பட்டவரின் எண்ணிக்கை 22 லட்சத்து 19 ஆயிரத்து 452 நபர்கள் ஆக உள்ளது.