மழைநீர் பாதிப்புகளை சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை; அமைச்சர் வேலுமணி
கனமழை காரணமாக, பாதிப்புக்கு ஆளான பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மழை பாதிப்புகளை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வேலுமணி கூறினார்.
தமிழகத்தில் வடமேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது.
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமாழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று விடிய விடிய பெய்த கனமழையால், பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில், சென்னை அடையாறில் அமைச்சர் வேலுமணி, ஆய்வு செய்தார்.
அப்போது, மழை பாதிப்பு குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். மழை பாதிப்புகளை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் முடக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுக்கிணங்க போர்க்காலப் அடிப்படையில் பருவமழை முன்னிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
பருவமழையால் பாதிப்புக்கு ஆளான பகுதிகளில், அரசு கவனம் எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். அதன் அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் வேலுமணி கூறினார்.