அடி தூள்.. ஆளுநரின் பரசீலனையில் நீட் தேர்வு மசோதா.. ஆளுநர் மாளிகை அதிரடி சரவடி தகவல். ஸ்டாலின் உற்சாகம்.
கோப்புகள் பரிசீலனையில் உள்ளது என்று டிசம்பர் 17 அன்று ஆளுநரின் துணைச் செயலாளரும் பொது தகவல் அதிகாரியுமான எஸ். வெங்கடேஸ்வரன் பதிலளித்துள்ளார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென்றும், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழகத்தில் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ள மசோதா ஆளுநர் பரிசீலனையில் இருந்து வருவதாக தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வெளியாகியுள்ளது. பொதுப்பள்ளி மேடையின் மாநிலப் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு இந்த மசோதாவின் நிலை மற்றும் அதன் மீது ஆளுநர் எடுத்த நடவடிக்கை குறித்து தகவல் உரிமை அறியும் சட்டத்தின் மூலமாக முன்வைத்த கேள்விகளுக்கு இவ்வாறு பதில் கிடைத்துள்ளது.
தமிழக அரசு அனுப்பிய கோப்புகள் பரிசீலனையில் உள்ளது என்றும், டிசம்பர் 17 அன்று ஆளுநரின் துணைச் செயலாளரும் பொது தகவல் அதிகாரியுமான எஸ். வெங்கடேஸ்வரன் மூலம் இந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. நீட் தேர்வால் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவு பறிக்கப்பட்டுள்ளது என்றும், கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவம் படிப்பு எட்டாக்கனியாக மாறி விட்டது என்றும், நீட் தேர்வின் மூலம் அவர்களுக்கு மருத்துவம் படிப்பு கிடைப்பது தடைபட்டிருக்கிறது என்றும், அதேபோல் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உள்ளது என்றும், இதை கருத்தில் கொண்டு திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் நீட் தேர்வு விலக்கு பெறும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு செய்திருந்தார். அதன்படி தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றி நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2021 செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலில் மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்து அவரின் ஒப்புதல் பெற்ற பிறகே அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப முடியும் என்பதால் இந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த நீட்தேர்வு காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டு வருகின்றனர். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 253 நபர்களுக்கு ஒரு மருத்துவர் எனும் சிறந்த மருத்துவ கட்டமைப்பு உடைய தமிழ்நாட்டில்தான் அதே மருத்துவ படிப்பு எனும் கனவு நிறைவேறாமல் மாணவர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் சோகம் தொடர்கிறது. கடந்த 2017ம் ஆண்டிலிருந்து நீட் தேர்வு நடைமுறைக்கு வந்ததிலிருந்து இதுவரை 15க்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வால் மரணமடைந்துள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் இந்த நீட் மரணங்கள் தொடர்கதையாகி வருகிறது. மற்ற மாநிலங்கள் அனைத்தும் அதை ஏற்றுக் கொண்டுவிட்ட நிலையில், தமிழக மட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசு சமீபத்தில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றி, அதற்கான மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், அது குறித்து எந்த தகவல்களும் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் தமிழகத்தில் புதிய கவர்னராக பொறுப்பேற்ற ஆர்.என் ரவியை சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குமாறு வலியுறுத்திவிட்டு வந்தார். ஆனாலும் அதில் கவர்னர் மாளிகையில் இருந்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்து வந்தது. இதே நேரத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா மீது ஆளுநர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதேபோல நாடாளுமன்றத்திலும் திமுக சார்பில் தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவை தமிழக ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பாமல் இருப்பது குறித்தும், தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி ஒப்புதல் அளிக்கக் கோரியும், குளிர்கால கூட்டத் தொடரின் இறுதி நாளில் அமளியில் ஈடுபட்டனர்.
மேலும் இதுதொடர்பாக திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் டி. ஆர் பாலு தலைமையில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மாளிகை அலுவலகம் சென்று, ஜனாதிபதியின் செயலாளரிடம் மனு கொடுத்து வந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ஒழிப்போம் என திமுகவினர் கூறி வந்தார்களே.. ஏன் இதுவரையில் நீட் தேர்வுக்கு விலக்குபெறவில்லை என அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திமுகவை விமர்சித்து கேலி கிண்டல் செய்து வருகின்றனர். இந்நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீட் தேர்வு மசோதா குறித்து பொதுப்பள்ளி மேடை மாநில பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக சில கேள்விகளை முன்வைத்திருந்தார். அதில் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழகத்தில் இளங்கலை மருத்துவ படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்கும் மசோதா ஆளுநர் ஆர்.என் ரவியின் பரிசீலனையில் இருப்பதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.
கோப்புகள் பரிசீலனையில் உள்ளது என்று டிசம்பர் 17 அன்று ஆளுநரின் துணைச் செயலாளரும் பொது தகவல் அதிகாரியுமான எஸ். வெங்கடேஸ்வரன் பதிலளித்துள்ளார். ஆளுநர் மாளிகையின் இந்த பதில் நீட் தேர்வு விவகாரத்தில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. ஆளுநரின் பரிசீலனையில் இந்த மசோதா இருக்கிறது என்றால், அவர் அதற்கு ஒப்புதல் அளித்து அதை விரைவில் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. கடந்த நவம்பர் 27 அன்று மாநில முதல்வர் மு. க ஸ்டாலின் ஆளுனரை சந்தித்தபோது நீட் தேர்வு மசோதாவை பரிசீலித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாறு அவர் ஆளுநரிடம் வலியுறுத்தியதாக கூறப்பட்டது. அதே நாளில் ராஜ்பவனிலிருந்து புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டது. தொடர் மழை மற்றும் கோவில்-19 தொற்றுநோயை கையாள அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது என்று மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மசோதா மீதான விவாதம் பற்றி அதில் எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.
இந்த நிலையில்தான் பிரின்ஸ் கஜேந்திரபாபு தாக்கல்செய்த தகவல் உரிமை சட்டம் கேள்விக்கு இந்த பதில் கிடைத்துள்ளது. இதே நேரத்தில் இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாறு கவர்னரை வலியுறுத்தி வரும் ஜனவரி 30ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை பொதுப்பள்ளி மேடை அமைப்பு நடத்த உள்ளது பிரின்ஸ் கஜேந்திர பாபு அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.