அடி தூள்.. இந்தியாவிலேயே முதலிடத்தில் சென்னை.. மார்தட்டும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு
இரண்டு தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டவர்கள் தவிர்த்து கேரளாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ப்படுகிறது. நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர் மருத்துவ கல்லூரிகளில் இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 4 புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டனர். கேரளா மாநிலத்திலிருந்து ரயிலில் வரும் பயணிகளுக்கு கொரோனா சோதனை மற்றும் ரயில் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், அண்டை மாநிலமான கேரளத்தில் தொற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக தமிழகத்தில் தொற்று பரவமால் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கேராளவிலிருந்து வரும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 5ம் தேதி முதல் கேரள எல்லை மற்றும் கேரளாவிலிருந்து வரும் விமானங்கள், ரயில்கள் வரும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது.
கடந்த 4 நாட்களில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 270 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை சான்றிதழ், இரண்டு தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டவர்கள் தவிர்த்து கேரளாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர் மருத்துவ கல்லூரிகளில் இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 4 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்ததன் மூலம் 600 மாணவர்களை கூடுதலாக சேர்க்க வாய்ப்பு என்றும் மீதமுள்ள 7 மருத்துவ கல்லூரிகளில் மத்திய குழுவினரின் ஆய்வு நடைபெற்ற பின்னர் விரைவில் அனுமதி கிடைக்கும் எதிர்பார்க்கிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்தும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்திற்கு இதுவரை 2 கோடியே 32 லட்சத்து 87 ஆயிரத்து 240 தடுப்பூசிகள் வந்துள்ளது. 7 லட்சத்து 6 ஆயிரத்து 136 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 20 லட்சத்து 47 ஆயிரத்து 560 தடுப்பூசிகள் கொள்முதல் செய்ததில் 11 லட்சத்து 11 ஆயிரத்து 562 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 49 லட்சத்து 46 ஆயிரத்து 793 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்தியாவில் சென்னை மாநகராட்சி தடுப்பூசி செலுத்திகொண்டவர்களில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.