தமிழகத்தில் திட்டமிட்டபடி 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் நாளை 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கரூர், திருவண்ணாமலை, திருச்சி மேற்கு, கொளத்தூர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாகக் கூறி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இந்தத் தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படும் என்று தொடர்ந்து சமூக ஊடகங்களிலும் தகவல்கள் பரவி வந்தன.
இந்நிலையில் மாலையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ தமிழகத்தில் சில தொகுதிகளில் தேர்தல் செலவின பொறுப்பாளர்கள் சோதனையின்போது பணம் மற்றும் இலவச பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதன்படி கொளத்தூர், திருச்சி மேற்கு, திருவண்ணாமலை, கரூர், கொளத்தூர் உள்ளிட்ட 7 தொகுதிகளில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் பரவியதில் உண்மையில்லை. இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. திட்டமிட்டபடி 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.” என்று சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.
திமுக தலைவர்கள் போட்டியிடும் முக்கியமான தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படும் என்று தகவல் பரவிய நிலையில், தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவின் இந்தப் பதிலால் திமுக தலைவர்களும் அக்கட்சித் தொண்டர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred