31 ஆம் தேதி இல்லங்க … 29 ஆம் தேதியே பெரும்பான்மையை நிரூபிப்பேன் ! அதிரடி எடியூரப்பா !!
கர்நாடக சட்டப் பேரவையில் ஜுலை 31 ஆம் தேதி பாஜகவின் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு விதித்திருந்தாலும் நான் 29 ஆம் தேதி காலையிலேயே நிரூபித்துவிடுவேன் என முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா 4 அவது முறையாக இன்று பதவியேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து வரும் 31 ஆம் தேதிக்குள் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வாஜுவாலா பாய் கெடு விதித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா , கர்நாடக சட்டப்பேரவையில் ஜூலை 29-ம் தேதி காலை 10 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிப்பேன் என தெரிவித்தார்.
கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தவுடன் நிதி மசோதா தாக்கல் செய்யப்படும். எக்காரணத்தைக் கொண்டும் தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட மாட்டேன். இன்னும் 5 மாதத்தில் எனது தலைமையிலான அரசு, மற்றும் முந்தைய அரசின் சாதனைகள் என்ன என்பது குறித்து காட்ட வேண்டிய அவசியம் எனக்கு உள்ளது. யாரு தவறு செய்திருந்தாலும் மறப்போம், மன்னிப்போம் என்ற எண்ணம் கொண்டவன் நான் என குறிப்பிட்டார்..
பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் பாஜக தொண்டர்கள் ஆகியோரின் ஆசிர்வாதத்தால் தற்போது பதவியேற்றுள்ளேன். எனது முதல் பணி விவசாயிகளின் நலன் மற்றும் அவர்களது கஷ்டங்களை போக்குவது குறித்து தான்.
அமைச்சரவை குறித்து அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுடன் ஆலோசிக்க உள்ளோம். தேவைப்பட்டால் நாளை டெல்லி சென்று ஆலோசித்த பின் அமைச்சரவை குறித்து முடிவெடுப்போம் என எடியூரப்பா தெரிவித்தார்