vishal press meet about r.k.nagar election
நியாயமாக எது நடைபெற வேண்டுமோ அதை அதை தேர்தல் ஆணையம் சிறப்பாக செய்துள்ளது என்றும், நேர்மை, நியாயம், நீதி வெற்றி பெற்றுள்ளது என்றும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நேற்று நடிகர் விஷால் மனு தாக்கல் செய்திருந்தார். வேட்புமனு தாக்கல் செய்த, நடிகர் விஷாலின் மனுவில் தொகுதியை சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும். இதில் முன்மொழியாத முகவரியில் தவறான 2 நபர்கள் பெயர் இடம் பெற்றிருந்ததாக கூறி விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி வேலுச்சாமி தள்ளுபடி செய்தார், மேலும் விஷாலின் மனுவில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததாக அதிமுக, திமுக தரப்பில் தேர்தல் அதிகாரியிடம் வாதிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த விஷால் மற்றும் அவரது ரசிகர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரியை சந்தித்து முறையீடு செய்த விஷால், தன்னை முன்மொழிந்த நபர்களுக்கு மிரட்டல் வந்துள்ளதாகவும், இது தொடர்பாக தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்தாகவும், பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

இதையடுத்து நடிகர் விஷால் அளித்த ஆதாரத்தின் அடிப்படையில் பல்வேறு வாதத்திற்கு பின்னர் அவரது வேட்பு மனு மீண்டும் ஏற்கப்பட்டதாக இரவு 8.30 மணியளவில் தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஷால் , தனது வேட்புமனு ஏற்கப்பட்டதாகவும், அவர் மீது அளிக்கப்பட்ட புகாரில் உண்மையில்லை என்ற அடிப்படையில் மனு ஏற்கப்பட்டதாக கூறினார்.

ஆர்.கே.நகர் தேர்தலை நேர்மையாக சந்திக்கவிருக்கிறேன். நல்லது நடக்க வேண்டும் என்றால் தடை இருக்கும் என்றும் கூறிய விஷால், நியாயமாக எது நடைபெற வேண்டுமோ அதை தேர்தல் ஆணையம் சிறப்பாக செய்துள்ளது என்றும், நேர்மை, நியாயம், நீதி வெற்றி பெற்றுள்ளது என்றும் கூறினார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை முதல் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளதாகவும் விஷால் தெரிவித்தார்.
