தேர்தல் ஆணையத்தில் விக்கிரமராஜா பரபரப்பு புகார்: வியாபாரிகள் 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து செல்ல முடியல.
வியாபாரிகளை சோதனை செய்து, ஆவணங்கள் இருப்பினும் 2-3 தினங்கள் வரை அலைய வேண்டிய சூழல் உள்ளதாக கூறிய அவர்,
வியாபாரிகளா அல்லது வியாபாரிகள் அல்லாதவர்களா என்பது அரசுத் துறை அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும் என்றும், சோதனை என்ற பெயரில் வணிகர்கள் எடுத்துச் சொல்லும் பணத்தை எடுத்து வைத்துக் கொண்டு அலைய விட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ளதால் வியாபாரிகள் 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து செல்ல முடியாத சூழல் உள்ளதாகவும், சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் அவர்களை அலைகழிப்பதாகவும் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா புகார் கெடுத்துள்ளார். மனிதாபிமானத்துடன் அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு மட்டும் பொதுத் தேர்தல் நடக்க உள்ளது.
தமிழ் நாட்டில் மொத்தமாக 21 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் 1, 374 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் உள்ளன. 138 நகராட்சிகளில் 3 ஆயிரத்து 843 வார்டு உறுப்பினர் பதவி இடங்கள் உள்ளன. 490 பேரூராட்சிகளும் அவற்றில் 7,621 ஒரு வார்டு உறுப்பினர் பதவி இடங்களும் உள்ளன. மொத்தத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் 12,238 பதவிகளுக்கான தேர்தலாக இது நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் முடிவடைந்த பிறகு வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களிலிருந்து ஒருவரையே பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர், மாநகராட்சி மேயர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
தற்போதைய தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகள் மற்றும் பணப் பட்டுவாடா போன்றவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைமுறையை காரணம் காட்டி வியாபாரிகள் 50ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளதாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா புகார் கெடுத்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி மாநில தேர்தல் ஆணையத்தில் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா புகார் மனு அளித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ளதாகவும், 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து செல்ல முடியாத சூழல் உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகள், வியாபாரிகளை சோதனை செய்து, ஆவணங்கள் இருப்பினும் 2-3 தினங்கள் வரை அலைய வேண்டிய சூழல் உள்ளதாக கூறிய அவர், வியாபாரிகளா அல்லது வியாபாரிகள் அல்லாதவர்களா என்பது அரசுத் துறை அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும் என்றும், சோதனை என்ற பெயரில் வணிகர்கள் எடுத்துச் சொல்லும் பணத்தை எடுத்து வைத்துக் கொண்டு அலைய விட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளதாகவும், வணிகர்கள் அரசுத்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாகவும், வணிகர்கள் 2 லட்சம் ரூபாய் வரை பணம் எடுத்து செல்லலாம் என வங்கிகள் தெரிவித்துள்ள நிலையில் அதனை அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார். மனிதாபிமானத்துடன் மாநில தேர்தல் ஆணையர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு வியாபாரிகள் முகம் பார்த்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.