அமெரிக்காவிலிருந்து அரசியலுக்கு திரும்பும் விஜயகாந்த்... வரவேற்க துடியாய் துடிக்கும் டி.டி.வி... எடப்பாடி..!
அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொண்ட விஜயகாந்த் உடல் நலம் தேறி புதிய உத்வேகத்துடன் இந்த வாரம் சென்னை திரும்ப உள்ளதால் தேமுதிக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொண்ட விஜயகாந்த் உடல் நலம் தேறி புதிய உத்வேகத்துடன் இந்த வாரம் சென்னை திரும்ப உள்ளதால் தேமுதிக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
அவர் மீண்டும் பழைய உற்சாகத்துடன் அரசியல் பணியாற்ற இருப்பதால் அரசியல் தலைவர்களும் அவரது வருகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஒரு மாதத்திற்கு மேலாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக குழு ஒன்றையும் அமைத்துள்ளார். எல்.கே.சுதீஷ் தலைமையில் மாநில நிர்வாகிகள் டாக்டர் இளங்கோவன், அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, திருப்பூர் அக்பர் ஆகியோர் அடங்கிய குழுவினர் விஜயகாந்த் சென்னை திரும்பிய உடன் கூட்டணியை உறுதி செய்ய உள்ளனர்.
வரும் மக்களவை தேர்தலில் தனது செல்வாக்கை மீண்டும் நிரூபிக்க தேமுதிக தீவிரமாக களமிறங்க திட்டமிட்டுள்ளது. தேமுதிகவில் ஏற்பட்டுள்ள தொய்வை சரி செய்ய விஜயகாந்த் ஒருவரால் மட்டுமே முடியும் என்பதால் அவரை மீண்டும் தேர்தல் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்து இருக்கின்றனர்.
தேமுதிகவை இழுக்க அதிமுக முயற்சி செய்து வருகிறது. இந்த கூட்டணி உறுதியானால் திமுகவுக்கு டஃப் கொடுக்கும் கூட்டணியாக மாற வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் டி.டி.வி.தினகரன் அணியுடனும் கூட்டணிக்கு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜயகாந்தின் வருகை அக்கட்சியினருக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும் என்பது உறுதி.