எடப்பாடி வாய்ச்சொல் வீரர்தான்! சட்டமன்ற தேர்தலில் தெரியும்... யார் காணாமல் போவார்கள் என்பது! விளாசிய விஜயகாந்த்
வரும் சட்டமன்ற தேர்தலின்போது, யார் இருப்பார்கள், யார் காணாமல் போவார்கள் என்பது தெரியும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பதிலடி கொடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியில் அதிமுக பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இன்று கமல் கட்சி ஆரம்பித்து விட்டார். அவர் என்ன பேசுகிறார் என்பது அவருக்கும் தெரியவில்லை. கேட்பவர்களுக்கும்
தெரியவில்லை.
ஏற்கனவே விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தார். அவர் இப்போது எப்படி இருக்கிறார்? என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். தற்போது பல நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து முதலமைச்சர் பதவிக்கு கனவு காணுகிறார்கள். நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால், விஜயகாந்த் போன்று காணாமல் போவார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பேசியிருந்தார்.
இந்த நிலையில், தேமுதிக பிரமுகர் ஒருவர் இல்ல திருமண விழாவில் விஜயகாந்த் கலந்து கொண்டார். இதன் பிறகு, செய்தியாளர்களைச் அவர் சந்தித்தார். அப்போது அவரிடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த விஜயகாந்த், கூடிய விரைவில் தேர்தல் வரும், அப்போது யார் காணாமல் போவார்கள் என்று பார்க்கலாம். தேமுதிக கட்சிக்காரர்களா? அல்லது அதிமுக கட்சிக்காரர்களா? என்பதை அப்போது பார்ப்போம் என்று கூறினார்.