புஸ்வாணம் ஆகிப்போன முத்துக்கருப்பன் ராஜினாமா…. ஏற்க மறுத்த வெங்கய்யா நாயுடு !!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தனது மாநிலங்களவை எம்.பி., பதவியை அதிமுக.,வை சேர்ந்த முத்துக்கருப்பன் இன்று ராஜினாமா செய்தார். ஆனால், அவரின் ராஜினாமாவை வெங்கையா நாயுடு ஏற்க மறுத்துவிட்டார். அந்த கடிதம் நாடாளுமன்ற சட்டத்திற்கு உட்பட்டதில்லை என்று கடிதம் நிராகரிக்கப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து வரம் மத்திய அரசைக் கண்டித்து, மாநிலங்களவை எம்.பி.,யான முத்துக்கருப்பன் தனது ராஜினாமா கடிதத்தை ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கைய்யா நாயுடுவுக்கு அனுப்பி வைத்தார்.
அந்த கடிதத்தை அனுப்புவதற்கு முன்பு அதை செய்தியாள்களிடம் வாசித்துக் காண்பித்தார். அதில், எனது பதவி காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் மக்களுக்காக ராஜினாமா செய்கிறேன். மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் மிகுந்த மனவேதனையுடன் ராஜினாமா செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்..
இதைத் தொடர்ந்து பேட்டி அளித்த அவர், முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைத்து என்னை சமாதானம் செய்வார் என்பதால் எனது மொபைல் போனை அணைத்து வைத்து விட்டேன். யார் சொன்னாலும் எனது முடிவில் பின்வாங்கவோ, சமாதானம் அடையவோ மாட்டேன்.
காவிரி நீர் பிரச்னையால் 19 மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காவிரிக்காக அதிமுக கடுமையாக போராடி வருகிறது. அரசியலுக்காக குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல் இருக்கலாமா? என்னால் இதைத்தான் செய்ய முடியும். இரு மாநில பிரச்னை என்பதால் மத்திய அரசு தான் பிரச்னையை தீர்க்க வேண்டும் என குறிப்பிட்டார்.
ஆனால் முத்துக்கருப்பன் கொடுத்தனுப்பிய கடிதத்தை ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார். அந்த கடிதம் பார்லிமென்ட் சட்டத்திற்கு உட்பட்டு இல்லை என்று கூறி, ராஜினாமா கடிதத்தை வெங்கையா நாயுடு நிராகரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. பெரிதாக பில்ட்டப் பண்ணப்பட்ட முத்துக்கருப்பனின் கடிதம் நிராகரிக்கப்பட்டதால் அது புஸ்வானம்போல் ஆகி விட்டது.