லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையை கடந்தமுறை முன் கூட்டியே அறிந்த வேலுமணி தரப்பினர் அலார்ட் ஆனதால் இந்த முறை  ரகசியமாக வைத்திருந்து போலீசார் சோதனை நடத்தி  வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சோதனையில் சிக்காத வேலுமணி

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதிமுக ஆட்சி காலத்தில் முக்கிய அமைச்சராக இருந்த வேலுமணி மீது பல்வேறு டெண்டர் முறைகேடு புகார்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்தநிலையில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஒவ்வொரு அமைச்சர்களின் வீடுகளாக சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட 60 இடங்களில் சோதனை நடைபெற்றது. நாமக்கல்,சேலம், ஈரோடு, சென்னை என பல்வேறு இடங்களில் 300க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எம்.ஆர்.சி நகரில் உள்ள ஒரு தனியார் அபார்ட்மென்டில் தங்கியிருந்த வேலுமணியை சுற்றி வளைத்து விசாரணை மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் நினைத்து இருந்தனர். ஆனால் இந்த தகவல் முன் கூட்டியே அறிந்த வேலுமணி அங்கிருந்து உடனடியாக வெளியேறி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு சட்டமன்ற விடுதிக்கு வந்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் எம்.எல்.ஏ. விடுதியில் வைத்து விசாரணை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் குவியும் நிலை ஏற்பட்டது.

ரகசியம் காத்த அதிகாரிகள்

மேலும் கடந்த முறை 60 இடங்களில் நடைபெற்ற சோதனையில் பெரிய அளவிலான பணம் எதுவும் கிடைக்காத நிலை தான் ஏற்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொள்ளவுள்ளதாக முன் கூட்டியே தகவல் கிடைத்ததால் வேலுமணி தரப்பினர் அலார்ட் ஆனதாக கூறப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் யாரோ வேலுமணி தரப்பினருக்கு தகவல் கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இந்தநிலையில் தற்போது மீண்டும் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் நடைபெறவுள்ள சோதனையை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ரகசியம் காத்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக வேலுமணியின் நடமாட்டத்தை கண்காணித்த அதிகாரிகள் சோதனைக்கான தேதியை குறித்துள்ளனர். இதனையறியாத வேலுமணி கோயிலில் நடைபெற்ற ஒயிலாட்டம் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது

சோதனை வெற்றியா?

இதன் படி தற்போது கோவை வீட்டில் வைத்தே வேலுமணியிடம் தற்போது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த முறை கோட்டை விட்ட அதிகாரிகள் இந்த முறை வேலுமணி சிக்கியுள்ளதாக கூறுகின்றனர். இருந்த போதும் எப்படியும் மீண்டும் சோதனை நடைபெறவாய்ப்பு இருப்பதாக நினைத்து வேலுமணி இந்த முறையும் உஷாராக இருந்ததாகவே கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் இந்த சோதனை முடிவுக்கு பிறகு லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிக்கையும், வேலுமணியின் பேட்டியும் தான் இதற்கு பதில் சொல்லும்