2024 -ல் 40 இடங்களையும் அதிமுகவே கைப்பற்றும் .. மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த வேலுமணி, தங்கமணி..
எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களையும் அதிமுக வெற்றி பெறும் என அக்கட்சியின் அதிமுக கொறடா, முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.
எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களையும் அதிமுக வெற்றி பெறும் என அக்கட்சியின் அதிமுக கொறடா, முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார். விளம்பரத்தில் மட்டும் தான் திமுக அரசு ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அவற்றை மக்கள் வெகுவாக பாராட்டி வரவேற்று வருகின்றனர். அதேநேரத்தில் எதிர்கட்சியான அதிமுக திமுக அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.
இந்நிலையில் அதிமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறும் வகையில் அம்மா பேரவை சார்பில் மாவட்ட செயலாளர்களுக்கு செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. கூட்டத்தினை கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர். அதற்கான இரண்டாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் மூத்த நிர்வாகிகள் பொன்னையன் எஸ். பி வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர் ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிமுகவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுதான் திமுகவின் எண்ணம், அதிமுகவுக்கு ஆதரவாக உழைப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள், திமுக ஆட்சி அமைந்தது முதல் மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதிமுகவை வளர்க்க அதிக அளவில் இளைஞர்களுக்கு கட்சியில் பொறுப்பு வழங்க வேண்டும். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்திலேயே தொண்டர்கள் செயல்பட வேண்டும், சிறகாக நாம் பணியாற்றினால் 2026-ல் மீண்டும் ஆட்சி அமைப்போம். நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு நிச்சயம் பாடம் புகட்ட மக்கள் காத்திருக்கிறார்கள் இவ்வாறு கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணி திமுக அரசு செய்வது சாதனை அல்ல வேதனை, வேதனையை மட்டுமே தமிழக மக்களுக்கு அவர்கள் கொடுத்து வருகின்றனர், லேபிள் ஒட்டி அதிமுகவின் திட்டங்களை திமுக திறந்து வருகிறது. ஓராண்டு திமுகவின் மோசமான ஆட்சியை மக்கள் பார்த்து வருகிறார்கள். விளம்பரத்தில் மட்டுமே திமுக ஆட்சி ஓடிக்கொண்டிருக்கிறது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் அதிமுக கைப்பற்றும் இவ்வாறு அவர் கூறினார்.