அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதால் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் தாக்கல் செய்தார். அப்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுகவினர் சட்டமன்றத்தில் பேசுவதற்கு அனுமதி கேட்டனர். ஆனால் சபாநாயகர் அப்பாவு, நிதி நிலை அறிக்கையின் போது வேறு எந்த அலுவல்களும் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என கூறினார். இருந்த போதும் நீண்ட நேரம் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் பட்ஜெட்டை புறக்கணித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பழி வாங்கும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தேர்தலின் போது எந்த வகையில் நடந்து கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும் என கூறினார். முன்னாள் அமைச்சரான அவர் மனித உரிமைகளை மீறும் வகையில் நடந்து கொண்டதாக குறிப்பிட்டார். இந்த நிலையில் அவர் மீது அரசு பொய் வழக்கு போடுவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தங்கம் தென்னரசு தெரிவித்தார். ஜெயக்குமார் மீது சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் அதிமுக முன்னாள் அமைச்சரான வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் காட்டாத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தவர், கிரிப்டோகரன்சி வழக்கத்தில் இல்லாத நிலையிலும் அதன் பெயர் மட்டுமே தற்போது நாடு முழுவதும் பேசப்பட்டு வருவதாக கூறினார், அப்படி உள்ள நிலையில் முன்னாள் அமைச்சரான வேலுமணி ஊழல் பணத்தில் கிரிப்டோகரன்சி வரை முதலீடு செய்துள்ளதாக கூறினார். மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக பேசுவதற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லையென்றும் கூறினார்.
