சந்திராயன் பின்னடைவிற்கு காரணம் வெளிநாட்டு சதி.. மக்களவை எம்பியின் கணிப்பு!!
சந்திராயன் விண்கலத்தின் பின்னடைவிற்கு சில வெளிநாடுகள் சதி செய்திருக்கலாம் என்று மக்களவை உறுப்பினர் வசந்த குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 7 ம் தேதி நிலவில் தரையிறங்க இருந்த சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், இறுதி நிமிடங்களில் தகவல் தொடர்பை இழந்தது. அதன்பிறகு ஆர்பிட்டர் மூலம் அதன் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது அதனுடன் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ சார்பில் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இதுகுறித்து கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் இன்று செய்தயாளர்களிடம் பேசினார். அப்போது, சந்திராயன் விண்கலத்தின் பின்னடைவிற்கு, இந்தியா வல்லரசாக வளர்ந்து விடக்கூடாது என நினைக்கும் வெளிநாடுகளின் சதியாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார்.
திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி சுமுகமான முறையில் இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் அரசும் எதிர்க்கட்சியும் போட்டிபோட்டு குளங்களை தூர்வாருவதை பாராட்டிய அவர், தண்ணீர் வீணாவதை தடுக்க தடுப்பணைகள் கட்டுவது, பழுதான செட்டர்களை சீர் செய்வது போன்ற பணிகளையும் செய்யவேண்டும் என்று கூறினார்
மேலும் காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்கு போடுவதை விட்டுவிட்டு நாட்டுநலனில் பிரதமர் மோடி அக்கறை செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இதனிடையே இன்று நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் வசந்த் அண்ட் கோவின் 82 வது கிளையை வசந்த குமார் திறந்து வைத்தார்.