பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குனர் பாக்கியராஜ் கூறியிருந்த நிலையில் பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மோடியும் அம்பேத்கரும்
மோடியும் அம்பேத்கரும் என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார் என்றும் அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" என்று பிரதமர் மோடியைப் புகழ்ந்து இளையராஜா அந்த புத்தகத்தில் எழுதியுள்ளார். இதற்கு பல அரசியல் கட்சியினர் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் - புதிய இந்தியா 2022" என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது.

குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நூலை வெளியிட, திரைப்பட இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் பெற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பாக்யராஜ், பிரதமரை வெளிநாடு செல்கிறார் என குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இத்தனை நாடுகளுக்கு ஓய்வில்லாமல் எப்படி செல்கிறார் ? அவர் உடலை எப்படி வைத்துக் கொள்கிறார் என பார்ப்பேன். இந்தியாவுக்கு இப்படி எனர்ஜியான பிரதமர் தான் தேவை. இக்கட்டான சூழல் வரும் போது சமாளிப்பது ரெம்ப ரெம்ப கஷ்டம். எப்படி சென்றாலும் விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் 3 மாதம் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள்.ஏன் 3-மாசம்னு சொல்றேன்னா... 4-வது மாசம்தான் ஒரு சிசுவுக்கு வாய் உருவாகும். 5வது மாசம்தான் காது உருவாகும். வாயும் சரியா வரலை, காதும் சரியா கேட்காதவங்களைதான் 3-வது மாசமே பிறந்த `குறைபிரசவ குழந்தைனு சொல்றேன். இப்படியானவங்க நல்லதை அவங்களும் பேசமாட்டாங்க நல்லது சொன்னா அதை காது கொடுத்தும் கேட்க மாட்டாங்க என கூறியுள்ளார். இதற்கு பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளர்,

டிசம்பர் 3 அமைப்பு கண்டனம்
டிசம்பர் 3 இயக்க தலைவர் தீபக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலி, அக்குழந்தைகளின் பெற்றோர்களின் வலி தெரியுமா? என இயக்குனர் பாக்யராஜ்க்கு கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், அரசியல் எதிரிகளை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என நீங்கள் சொல்லலாமா? என்றும், ஊனமுற்றோரின் இயலாமையை பேசி அரசியல் காண முயற்சிப்பதா? என்றும் தீபக் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.இதே போல பல்வேறு அமைப்பினரும் இயக்குனர் பாக்கியராஜ் கருத்திற்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
