கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அருகே பணம் எண்ணும் கவுண்டிங் மெஷின் இருந்தது பற்றி சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்த நிலையில், அதுதொடர்பாக  வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். 

சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனைத் தோற்கடித்தார். எம்.எல்.ஏ.வாக அவர் பதவியேற்ற பிறகு கோவை கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையம் அருகில் தொகுதி சட்டப்பேரவை அலுவலகத்துக்கு சென்றார். அந்த அலுவலகத்திற்குள் ‘தன லாபம்’ என எழுதி வானதி சீனிவாசன் பூஜை செய்தார். தொகுதி அலுவலகத்தில் ‘தனலாபம்’ என அவர் எழுதியது விமர்சனங்களுக்கு உண்டாக்கியது.
இந்நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் இன்று நடைபயிற்சி செய்தபடி பொதுமக்களை சந்தித்து வானதி சீனிவாசன் குறைகள் கேட்டார். பின்னர் அவர் காணொலி காட்சி கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் வானதி சீனிவாசன் அருகே பணம் என்னும் கவுண்டிங் மெஷின் இருந்தது. இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதை வைத்து வானதி சீனிவாசனுக்கு எதிராக பலரும் விமர்சன கணைகள் ஏவினர்.
இந்நிலையில் இதுதொடர்பாக வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். அதில், “ரேஸ்கோர்ஸ் பகுதியில் மக்களை சந்தித்து விட்டு வீட்டுக்கு வர நேரம் இல்லாத காரணத்தால், நண்பரின் அலுவலகத்தில் காணொலி கூட்டத்தில் கலந்து கொண்டேன். இது எனது அலுவலகம் அல்ல. கவுண்டிங் மெஷின் இருப்பதும் எனக்கு தெரியாது. அதற்குள் சிலர் கற்பனை சிறகுகளை விரிக்கின்றனர்” எனப் பதிவிட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred