இளவரசி மகன் விவேக்கை குறி வைக்கும் பன்னீர்: செய்வதறியாமல் தவிக்கும் வைத்திலிங்கம்!
சசிகலாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு, அவமானப் படுத்தப்பட்டவர் பன்னீர்செல்வம் என்றால், அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் பாதிக்கப்பட்டு, தமது சொந்த தொகுதியான ஒரத்தநாட்டிலேயே, திவாகரனால் தோற்கடிக்கப்பட்டவர் வைத்திலிங்கம்.
சசிகலாவால் பாதிக்கப்பட்ட இந்த இருவருமே, அணிகள் இணைப்பு குறித்து, தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனாலும், அதற்கு ஒரு முடிவு எட்டவில்லை என்பதுதான் அதிமுக தொண்டர்களின் கவலையாக உள்ளது.
எப்படியாவது, இருவரும் ஒன்று சேர்ந்து அதிமுகவை காப்பாற்றுங்கள் என்று, தொண்டர்கள் கோவில்களுக்கு சென்று இன்னும் பிரார்த்தனை நடத்தாததுதான் பாக்கி.
முதல்வர் பதவி தொடர்பான பிரச்சினை ஒரு பக்கம் இருந்தாலும், இளவரசி மகன் விவேக்கை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார் பன்னீர்.
சசிகலா உள்ளிட்ட உறவுகள் அனைவரையும் கட்சியை விட்டு நீக்கிய ஜெயலலிதா, விவேக்கை மட்டும் நீக்க வில்லை. ஜெயா டீ.வி மற்றும் ஜாஸ் சினிமாவின் நிர்வாகத்தை தற்போது அவர்தான் கவனித்து வருகிறார்.
அத்துடன், சசிகலாவோடு தொடர்ந்து சந்தித்து வருபவரும், அதற்காக பெங்களூரில் தொடர்ந்து தங்கி இருப்பவரும் விவேக்தான். மேலும், அவர் கடந்த எட்டு ஆண்டுகளாக கட்சியில் உறுப்பினராகவும் இருக்கிறார்.
அரசியலில் பெரிய அளவில் அவர் ஈடுபாடு காட்டுவதில்லை. ஆனால், சசிகலாவுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர். அவரிடம் மட்டுமே சசிகலா தமது மனக்குமுறலை வெளிப்படுத்துவார்.
ஆகவே, விவேக்கை முதலில் கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அடம்பிடிக்கிறார் பன்னீர். ஆனால், கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத, எந்த குறுக்கீடும் செய்யாத விவேக்கிற்கு எதற்காக இவ்வளவு முக்கியத்துவம் என்று கேட்கிறார் வைத்திலிங்கம்.
இதனிடையே, பன்னீர் மகன்களுடன் நெருக்கமாக இருந்த விவேக்கை, அரசியலை நோக்கி இழுப்பதற்காக பன்னீர் இவ்வாறு பேசுகிறாரா? என்றும் எடப்பாடி தரப்பில் சந்தேகம் எழுப்புகின்றனர்.