தினகரனுக்கு வைத்திலிங்கம் விடுத்த சவால்..! ஏற்பாரா தினகரன்?
ஆட்சியைக் கலைப்பேன் என ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சபதம் ஏற்க தினகரன் தயாரா என வைத்திலிங்கம் எம்.பி சவால் விடுத்துள்ளார்.
பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்த நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள், தாங்கள் பழனிச்சாமி அரசுக்கு கொடுக்கும் ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என திமுகவும் தினகரன் ஆதரவாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஆளுநர் சட்டமன்றத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே வரும் 20-ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுகவுடன் சேர்ந்துகொண்டு ஆட்சியைக் கலைக்க தினகரன் முயற்சிப்பதாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவில் பேசிய வைத்திலிங்கம், ஆட்சியைக் கலைக்க துடிக்கும் தினகரன், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஆட்சியைக் கலைப்பேன் என சபதம் எடுக்க தயாரா என சவால் விடுத்தார். மேலும் அப்படி தினகரன் சவால் விடுவாராயின் உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.