நாடாளுமன்றத்தில் புலியாய் முழங்கிய வைகோ... ஆடிப்போய் அட்வைஸ் செய்த வெங்கைய்யா..!
மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டாம். கோரிக்கை மட்டும் விடுங்கள் என மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வைகோவுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.
மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டாம். கோரிக்கை மட்டும் விடுங்கள் என மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வைகோவுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக நேற்று பதவியேற்றார். இன்று மாநிலங்களவை கூடியதும் பூஜ்ய நேரத்தில் வைகோவை பேச அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அழைத்தார். அப்போது பேசிய வைகோ, ''தமிழ்நாட்டின் காவிரி பாசனப் பரப்பை விளைநிலங்களை முற்றிலும் அழிக்கக்கூடிய பெருங்கேடான மீத்தேன், ஷெல் கேஸ் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன் எரிகாற்றுக் கிணறுகள் தோண்டும் திட்டத்தை நடுவண் அரசு செயல்படுத்த முனைகிறது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இத்தகைய அழிவுத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மிகவும் தீவிரமாக இருக்கின்றது.
ஒவ்வொரு கிணறும் 10,000 அடி ஆழத்திற்குத் தோண்டப் போகிறார்கள். ஏற்கனவே தூத்துக்குடியைச் சீரழித்த ஸ்டெர்லைட் உரிமையாளர்கள் வேதாந்தா நிறுவனம், காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்ட 276 இடங்களில் உரிமம் வழங்கி இருக்கின்றார்கள்.
ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு 67 கிணறுகள் தோண்ட உரிமம் வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் அவர்கள் தற்போது இரண்டு கிணறுகளைத் தோண்டிக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த ஜூலை 17ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம், நாகப்பட்டினம் மாவட்டம் மாதானம், கடலூர் மாவட்டம், புவனகிரி ஆகிய இடங்களில் கிணறுகள் தோண்ட உரிமம் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் மத்திய அரசுக்குப் பல லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்து கருவூலம் பொற்காசுகளால் நிரம்பி வழியும். ஆனால், ஆசியாவின் நெற்களஞ்சியமான தஞ்சை மண்டலம் விவசாயத்திற்கு உதவாத பாலை நிலமாக மாறிவிடும். இதனால் தமிழகம் மற்றொரு எத்தியோப்பியா ஆகிவிடும். தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறையினர் அகதிகளாக பிச்சைப்பாத்திரம் எந்தக் கூடிய நிலைமை உருவாகும். கேடான அழிவுத் திட்டங்களைக் கைவிடாவிட்டால் தமிழக மக்கள் மத்திய அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்’’ எனத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அரசுக்கு கோரிக்கை விடுங்கள். ஆனால், எச்சரிக்கை செய்யாதீர்கள் என அறிவுறுத்தினார்.