"மோடியின் நடவடிக்கையால் வைகோவை இழந்தோம்" - திருமா பரபரப்பு பேச்சு
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு புதுச்சேரி உப்பளம் புதிய துறைமுக மைதானத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு தலைமை தாங்கி திருமாவளவன் பேசியதாவது:
கடந்த நவம்பர் 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பு ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். குறிப்பாக நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் அரசியல் சட்டத்தின் மீதும், தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்.
அனைத்து பகுதியை சேர்ந்த ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் இம்மாநாடு நடத்தப்படுகிறது. பிரதமர் மோடி நாடாளுமன்றத்தையும் மீறி, ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் மக்கள் நலக்கூட்டணி உருவாகும் போதே இது நீடிக்காது என பலர் வதந்தியை பரப்பினர். நாங்கள் தொடர்ந்து அப்போது ஒற்றுமையை நிலைநிறுத்தி வந்தோம். இந்த மேடையில் வைகோ இல்லாதது வேதனை வருத்தத்தை அளிக்கிறது.
மோடியின் அறிவிப்பால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் தலைவர்கள் உடனான நட்பு தொடர்ந்து வருகிறது. மோடியின் கொள்கையால் வைகோவுடனான நட்பில் விரிசல் உண்டாகி விட்டது. தேர்தல் ஆதாயத்துக்காக மட்டும் இந்த கூட்டணி அமைக்கப்படவில்லை. இந்த இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை இந்த இயக்கத்தை வழிநடத்தி செல்லும். ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை எதிர்த்து தொடர்ந்து விசிக குரல் தரும்.
இவ்வாறு அவர் பேசினார்.