தமிழகத்தின் தடுக்கி விழுந்தால் தடுப்பூசி முகாம் என்ற நிலை ஏற்படுத்தப்படும் என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தின் தடுக்கி விழுந்தால் தடுப்பூசி முகாம் என்ற நிலை ஏற்படுத்தப்படும் என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கடந்த 29 ஆம் தேதி, இலங்கையில் நிலவும் பொருளாதார தட்டுப்பாடு காரணமாக தமிழக அரசின் சார்பில் பொருள் உதவி வழங்கப்படும் என அறிவித்தார். அதனை தொடர்ந்து அரிசி, பால் பவுடர் மற்றும் 28 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்களை வழங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் இதற்கான பணிகளை செய்தது. இந்த நிலையில் 137 வகையான அத்தியாவசிய மருந்துகள், சிறப்பு மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை பொருட்களை வழங்க சுகாதாரத்துறை தரப்பிலிருந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதல் தவணையாக 53 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் இரண்டு சிறப்பு மருந்துகள் ரூபாய் 8.87 கோடி ரூபாய் மதிப்பில் வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 36 வகையான அத்தியாவசிய மருந்துகள், 39 சிறப்பு மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்ட இரண்டு தவணையாக வழங்கப்படும். மேலும் தற்போதைய 55 மருந்துகளில், 7 மருந்து வகைகள் குளிர்சாதன வசதி கொண்டு செல்லத் தக்கதாகவும், 48 மருந்துகள் சாதாரண வசதிகள் கொண்டு செல்லத் தக்கதாகவும் இருக்கிறது. இந்த மருந்துகள் அனைத்தும் விரைவில் கப்பல் மூலமாக இலங்கைக்கு தமிழக முதலமைச்சர் அனுப்பி வைப்பார்.

மேலும் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பொறுத்தவரை 93.5 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு உள்ளனர். இரண்டாம் தவணை 81.85 சதவீதம் பேர் போட்டு உள்ளனர். கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நல்ல முறையாக நடைபெற்று வருகிறது. தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாமல் உள்ளவர்களுக்கு தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் மாதம் ஒரு முறை தடுப்பூசி முகாம் இனிமேல் நடைபெறும், எனவே வருகின்ற ஜூன் 12 ஆம் தேதி ஒரு லட்சம் இடங்களில் தமிழக அரசின் சேவை துறைகளையும் ஒருங்கிணைத்து தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.