அம்மா மக்கள் முன்னேறக் கழகத்தின் தென் சென்னை வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக இருந்து வந்த வி.பி.கலைராஜன் அதிரடியாக அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த வி.சுகுமார் பாபு  புதிய தென் சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதையடுத்து அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனிக் கட்சியைத் தொடங்கினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதையடுத்து தமிழகம் முழுவதும் அமமுகவிற்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அப்போது சென்னையின் முக்கிய தளபதியாக இருந்த முன்னாள் எம்எல்ஏ வி.பி. கலைராஜன் தென் சென்னை வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தான் தமிழகம் முழுவதும் அமமுக போட்டியிடும் 24 எம்.பி.தொகுதி வேட்பாளர்களையும், 9 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர்களையும் தினகரன் அறிவித்தார்.

இதனிடையே அதிரடி திருப்பமாக தென் சென்னை வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக இருந்து வந்த வி.பி.கலைராஜன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதாலும், கட்சிக்கு அவப் பெயரை உருவாக்கிவிட்டதாலும் கலைராஜனை கட்சியில் இருந்து நீக்குவதாக அமமுகவின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார்.

மேலும் சென்னை அமைந்த கரையைச் சேர்ந்த வி.சுகுமார் பாபு புதிய தென் சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தினகரன் அறிவித்துள்ளார்..