Uttav thakrey talk about Modi and his govt

பொய்களாகப் பேசித்தான் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தார் என்று குற்றம் சாட்டிய சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, அவர் உலகின் எல்லா நாடுகளுக்கும் போய்விட்டார் என்றும் இனி மோடி வேற்று கிரகத்துக்குத்தான் போகணும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த 2104 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது மகாராஷ்ட்ராவில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதே போன்று சட்டமன்றத் தேர்தலிலும் அந்த கூட்டணியில் போட்டியிட்டன.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல இந்த இரு கட்சிகளுக்கும் இடையே பனிப்போர் தொடங்கியது. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர், மத்திய, மாநில அமைச்சரவையில் இருந்து சிவசேனா விலகியது, இதையடுத்து பாஜகவை சிவசேனா கட்சி மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

இந்நிலையில் சிவசேனா கட்சியின் 52-வது ஆண்டு விழா மும்பை புறநகரான கோரிகான் பகுதியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பேசினார்.

அப்போது கடந்த 2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக ஏராளமான பொய்களைப் பேசியது. மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்து அவர்களை நம்ப வைத்து தேர்தலில் வெற்றி பெற்றது. பொய்களைப் பேசித்தான், மோடி தலைமையில் பாஜக ஆட்சியைப் பிடித்தது என குற்றம்சாட்டினார்..

நாட்டில் எந்த சூழல் இருந்தாலும், அதைக் கண்டு கொள்ளாமல் பிரதமர் மோடி உலக நாடுகளைச் சுற்றுவதிலேயே ஆர்வமாக இருக்கிறார். ஏறக்குறைய அனைத்து நாடுகளுக்கும் மோடி பயணம் செய்துவிட்டதால், இனிமேல் வேற்று கிரகத்துக்குத்தான் மோடி பயணிக்க வேண்டும் என கிண்டல் செய்தார்.

ஜம்மு காஷ்மீரில் பிடிபி கட்சியுடன், பாஜக அமைத்திருந்த கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணிஎன தெரிவித்த அவர், காஷ்மீரில் பாஜக ஆட்சியில் இருந்தும் இந்திய வீரர்கள் தீவிரவாதிகளின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகாமல் தடுக்க முடிந்ததா? என கேள்வி எழுப்பினார்.

கடந்த 3 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் மட்டும் 600 வீரர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். அங்குள்ள பாஜக, பிடிபி அரசு எதற்கும் உதவாத அரசு. 3 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவிட்டு, வீரர்களை பலிகொடுத்துவிட்டு, அதில் இருந்து கவனத்தை திசைதிருப்ப இன்று பிடிபி ஆட்சிக்கு அளித்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்று இருக்கிறது என உத்தவ் தாக்ரே குற்றம் சாட்டினார்..