திமுக ஆட்சி காலத்தில் ரவுடித்தனம் செய்தார்கள் கோவில்களை இடிக்கிறார்கள் என அதிமுகவிற்கு மக்கள் வாக்களித்தார். அதிமுக எப்பவுமே வாயை மூடிக் கொண்டு இருப்பதால் மீண்டும் திமுகவிற்கு வாக்கு அளித்தார்கள்.

இந்துக்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள். வெறும் இரண்டரை சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளீர்கள் தூக்கி எறிய வெகு நாள் ஆகாது என எச்.ராஜா ஆவேசமாக கூறியுள்ளார். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசுகையில்;- திமுக ஆட்சி காலத்தில் ரவுடித்தனம் செய்தார்கள் கோவில்களை இடிக்கிறார்கள் என அதிமுகவிற்கு மக்கள் வாக்களித்தார். அதிமுக எப்பவுமே வாயை மூடிக் கொண்டு இருப்பதால் மீண்டும் திமுகவிற்கு வாக்கு அளித்தார்கள்.

கடந்த 55 வருடங்களாக இப்படி மாறி மாறி இவர்கள் ஆட்சி செய்து உள்ளார்கள். தர்மத்தைக் காக்க இந்த முறை பாஜகவிற்கு வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என கூறினார். 1967ம் ஆண்டில் இருந்து வந்த தீயசக்திகள் இந்துக்களுக்கு எதிராக மட்டும் செயல்படுகின்றன. ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இந்து கோயில்களை இடிக்கும் திமுக அரசு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்ச்சுகள், மசூதிகள் நீர்நிலைகளில் உள்ளன. அதை முடிந்தால் அப்புறப்படுத்தவும்.

இந்துக்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள். வெறும் இரண்டரை சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளீர்கள் தூக்கி எறிய வெகு நாள் ஆகாது. குடும்பத் தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் என்பது மக்களை ஏமாற்றும் செயல் மக்கள் ஏமாற மாட்டார்கள். ஊழலும், திமுகவும் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் அதிலிருந்து அவர்களை பிரிக்க முடியாது.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, கொரோனா பரவலால் வீட்டிலேயே முடங்கி இருந்த நம்மை தடுப்பூசி மூலம் காப்பாற்றியவர் பிரதமர் மோடி. அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். தாமரைக்கு வாக்களிக்காமல் வேறு யாருக்காவது வாக்களித்தீர்கள் என்றால் மகா பாவம். இதனை நான் சொல்லவில்லை, திருவள்ளுவரே சொல்லி உள்ளார். எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு' என திருக்குறளை சொல்லி எச்.ராஜா வாக்கு சேகரித்தார்.