போலீசின் தடையை மீறி கெத்து காட்டிய உதயநிதி! பல்லாயிரக்கணக்கான தொண்டர்களால் திணறிய மெரீனா சாலை....
போலீசின் தடையை மீறி உதயநிதி ஸ்டாலின் பேரணியாக சென்றார். அண்ணா சமாதியை நோக்கி பேரணி சென்ற பல்லாயிரக்கணக்கான தொண்டர்களால் மெரீனா சாலை ஸ்தம்பித்தது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனால் தமிழகமே போராட்டக்களமாக ஸ்தம்பித்துள்ளது.
காவிரி உரிமைகளைப் பெறுவதில் அரசியல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி ஸ்டாலின் அழைப்பை ஏற்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு பாமக, கொமதேக, லதிமுக, மஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு போராட்டத்தில் குதித்துள்ளது.
இன்று காலை 6 மணி முதல் கடைகள் மூடப்பட்டன. குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டன. மற்ற மாநில பேருந்துகளும் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. 5-ஆவது நாளாக திமுக மறியல் போராட்டம் நடத்தி வருகிறது. சென்னை அண்ணா சாலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மறியல் செய்து வருகின்றன.
ஸ்டாலின் சாலையில் அமர்ந்து மறியல் செய்துள்ளார். அதேபோல தோழமை கட்சி தலைவர்களான திருநாவுகரசர், திருமாவளவன் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து தோழமை கட்சி தலைவர்களோடு கையில் கறுப்புக் கோடி ஏந்தி அண்ணா சமாதி நோக்கி பேரணி மேற்கொண்டுள்ளார். வாலாஜா சாலையில் வழியாக மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் நோக்கி பேரணியாக சென்ற அனைவரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பதற்றம் நிலவியது.
இதனையடுத்து காவல்துறையினருக்கும், போரட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தடுப்பை மீறி பேரணியாக செல்ல முயன்றனர். இதனையடுத்து காவல்துறையினர் தடியடிக்கு தயாராகவே பதற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில் போலீசின் தடையை மீறி உதயநிதி ஸ்டாலின் பேரணியாக சென்றார். தடுத்து நிறுத்தப்பட்ட அனைவரும் மீண்டும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதோடு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனையடுத்து ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். ஸ்டாலினை குண்டு கட்டாக தூக்கிச் சென்று போலீசார் வேனில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்கட்சியினர் பேரணி, சாலை மறியல் காரணமாக அண்ணாசாலை, மெரீனா கடற்கரை சாலையில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.