முதலமைச்சர் பொறுப்பை ஏற்க உத்தவ் தாக்ரே மறுப்பு !! மகாராஷ்ட்ராவில் அடுத்தடுத்து திருப்பம் !!
மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பது தொடா்பாக தேசியவாத காங்கிரஸ் , காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், புதிய திருப்பமாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனக்கு முதல்வர் பதவி வேண்டாம் எனக் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் சேர்ந்துள்ள இந்தக் கூட்டணிக்கு மகா விகாஸ் அகாதி என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று மும்பையில் நண்பகல் 12 மணி முதல், மூன்று கட்சிகளும் தனித்தனியாக தங்கள் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வந்தனர்.
சிவசேனா கட்சி அரசை வழிநடத்தும் முக்கிய பொறுப்பான முதலமைச்சர் பதவியை எடுத்துக்கொள்ளும். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் துணை முதல்வர்களாக பொறுப்பு வகிப்பார்கள்.
காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஒருவருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படும். இதர அமைச்சரவைகள் கட்சியின் பலத்தைப் பொறுத்து பகிர்ந்தளிக்கப்படும். சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் சரிசமமாக அமைச்சரவை பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள, இரண்டு இடங்கள் மட்டும் குறைவாக காங்கிரஸ்க்கு வழங்கப்படும் என்று மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
உத்தவ் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று எம்.எல்.ஏக்கள் முடிவெடுத்துள்ளார்கள். இருப்பினும், இறுதி முடிவு சிவசேனா தலைவரால் எடுக்கப்படும்" என்று கூறினார்.
இந்நிலையில், மகாராஷ்டிர அரசியலில் புதிய திருப்பமாக, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவி தனக்கு வேண்டாம் எனக் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.