உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் தொகுதி உறுதியானது... கருணாநிதி வென்ற தொகுதியில் களமிறங்க முடிவு..!
திமுக சார்பில் சென்னையில் உள்ள சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.
திமுக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அவருடைய தாத்தா போட்டியிட்ட வென்ற சைதாப்பேட்டை, துறைமுகம், சேப்பாக்கம் அல்லது திருவாரூர் ஆகிய தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடுவாரா அல்லது அவருடைய தந்தை போட்டியிட்டு வென்று ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பது உறுதியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று திமுகவினர் பலரும் விருப்ப மனு தாக்கல் செய்திருந்த நிலையில், உதயநிதியே இன்று சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தார். எனவே, உதயநிதி ஸ்டாலின் அவருடைய தாத்தா போட்டியிட்டு 3 முறை வென்ற சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.