நிழல் முதலமைச்சராக உதயநிதி..??? மாஜி அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு.
உதயநிதி ஸ்டாலின் உதார்நிதி ஸ்டாலினாக வலம் வருகிறார் என விமர்சித்த ஜெயக்குமார், தமிழகத்தின் நிழல் முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார் என்றார்.
தமிழகத்தின் நிழல் முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். உதயநிதி இப்போது உதார் நிதியாக வலம் வருகிறார் எனவும் அவர் விமர்சித்துள்ளார். தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பன்வாரிலால் புரோஹித்தை இன்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் எஸ்.பி வேலுமணி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,
தேர்தல் நேரத்தில் திமுக வாய்க்கு வந்தபடி எல்லாம் வாக்குறுதி அளித்துள்ளதாக கூறினார். ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என கூறினர், ஆனால் இப்போது அது ஏன் நடக்கவில்லை என கேள்வி எழுப்பினார். நீட் தேர்வுக்கு விலக்கு பெற அதிமுக ஆட்சியில் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது, ஆனால் திமுக நீட் தேர்வை ரத்து செய்கிறோம் எனக் கூறி மாணவர்களை ஏமாற்றியுள்ளது. அதிமுகவில் இருந்த சட்டத்துறை செயலாளர்கள் தான் இப்போதும் சட்டத்துறை செயலாளர்களாக இருக்கின்றனர். அவர்கள்தான் அப்போதும் நீட் தேர்வுக்கு எதிராக சட்ட முன்வடிவை தயாரித்தார்கள் என தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் தற்போதைய திமுகவால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுவிட முடியுமா என கேள்வி எழுப்பினார்.?
உதயநிதி ஸ்டாலின் உதார்நிதி ஸ்டாலினாக வலம் வருகிறார் என விமர்சித்த ஜெயக்குமார், தமிழகத்தின் நிழல் முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார் என்றார். நீட்டுக்கு எதிராக அப்போது அப்படி பேசிய உதயநிதி இப்போது எங்கே போனார் எனவும் கேள்வி எழுப்பினார். நீட் தேர்வில் நடந்துவரும் தற்கொலைகளுக்கு திமுகவே பொறுப்பேற்க வேண்டும் என்றும் குற்றம்சாட்டி அவர், மாணவர்கள் தயவு செய்து உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள திமுக எப்போதும் தயாராக உள்ளது என்ற ஜெயக்குமார், ஆனால் ஆலோசனை கூட்டத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என கூறவில்லை, ஆனால் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதாக அறிவித்துள்ளனர். இது முறைகேட்டுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் விமர்சித்தார்.