திமுகவை தோற்கடிக்கக் கிடைத்த இரு துருப்புச் சீட்டு... அண்ணனையும், மன்னனையும் வைத்து பகீர் திட்டம்..!
குறிப்பாக தென் மாவட்டங்களில் திமுகவின் வெற்றியை அது கேள்விக்குறியாக்கிவிடும் என்பதை ஸ்டாலின் உணர்ந்துள்ளார். எனவே, அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று ஆலோசிப்பதற்காக, வரும் 23ஆம் தேதி திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தை ஸ்டாலின் கூட்டியுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 21ம் தேதி தமிழகம் வருகிறார் என்கிற தகவல், அரசியல் கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மு.க.அழகிரியை துருப்புச்சீட்டாக்கி திமுக வாக்குகளை பிரிப்பது, ரஜினியை தங்கள் பக்கம் இழுத்து இஷ்டத்துக்கு விடுவது என்கிற திட்டத்துடன் அவர் வருவதாக கூறப்படும் நிலையில், அதிமுக- திமுக இரண்டும் கவலையில் ஆழ்த்தப்பட்டுள்ளன.
அண்மையில் நடந்த பீகார் சட்டசபைத் தேர்தலில், மூன்றாம் முறையாக நிதிஷ்குமாரின் ஐக்கியஜனதாதளம் – பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. பொதுவாக இரண்டு முறை ஆட்சியில் இருந்தாலே, மூன்றாம் முறை ஆளுங்கட்சி மீது அதிருப்தி இருக்கும். எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு தரவே மக்கள் பொதுவாக ஆர்வம் காட்டுவார்கள்.
ஆனால், பீகார் தேர்தலில் கருத்து கணிப்புகளுக்கு மாறாக, பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதற்கு முக்கிய காரணம், பாஜகவின் சாணக்கியர் என்று கருதப்படும் அமித்ஷா வகுத்த வியூகங்களால் இந்த வெற்றி சாத்தியப்பட்டதாக கூறப்படுகிறது. அவரது திட்டப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து, லோக்ஜனசக்தி விலகிச் சென்றது. இஸ்லாமியத்தின் ஓவைஸியை சுற்றியிருந்த கூட்டம் போட்ட தூபத்தால், அவரும் கூட்டணி வைக்காமல் தனித்து களமிறங்கினார். இதனால், பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறின. திட்டமிட்டபடி, அந்தக் கூட்டணியே மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது.
பீகார் தேர்தல் முடிந்ததை அடுத்து பா.ஜ.க.,வின் கவனம், மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தின் பக்கம் கவனம் செலுத்தி உள்ளது. வரும் 2021 தமிழக சட்டசபை தேர்தலில் எப்படியும் பாஜக, இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது அமித்ஷாவின் கண்டிப்பான உத்தரவாம். அதனால்தான் வேல் யாத்திரை என்ற பெயரில் கள்மிறங்கிவிட்டார் தமிழக பாஜக தலைவர் முருகன். அத்துடன், அமித்ஷாவும் ரகசிய காய் நகர்த்தல்களுடன் தமிழகம் வந்து ஆலோசனை நடத்துகிறார். அமித்ஷாவின் திட்டம். திமுகவுக்கு விழும் வாக்குகளை பிரிப்பது. அதன்படி, அரசியல் இருந்து ஒதுங்கி இருக்கும் மு.க.அழகிரியை மீண்டும் ஸ்டாலினுக்கு எதிராக கொம்பு சீவிவிடுவதுதான் அமித்ஷாவின் திட்டம்.
மு.க.அழகிரியும், தி.மு.க.வில் மீண்டும் இணைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் இரு ஆண்டுகளாக காத்திருந்தார். அவரை இணைத்துக்கொள்ள கருணாநிதி குடும்பம் முயன்று பார்த்தாலும், ஸ்டாலின் குடும்பத்தினர், அழகிரிக்கு வழி விடவில்லை. இதனால், மு.க.ஸ்டாலின் மீதான அவரது அண்ணன் அழகிரியின் கோபம் பலமடங்கு அதிகரித்து விட்டது. அதேநேரத்தில், தி.மு.க.வை பொருத்த அளவில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அதிருப்தியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அழகிரியின் கோபம், அதிருப்தி திமுகவினரின் ஏக்கம் இரண்டையும் மனதில் கொண்டு, மு.க.அழகிரியை ஸ்டாலினுக்கு எதிராக கட்சித் தொடங்கச் செய்வது அமித்ஷா போட்டுத்தந்த திட்டம் என்று பேசிக் கொள்கிறார்கள்.
மு.க.அழகிரியை தனிக்கட்சி ஆரம்பிக்க வைப்பதன் மூலம் தி.மு.க.வின் அதிருப்தியாளர்களை வெளியே கொண்டு வர முடியும். அவர்களுக்கு அழகிரி அடைக்கலம் தந்து ஒருங்கிணைக்க முடியும். இதன் மூலம் தி.மு.க.வின் வாக்கு வலிமையை குறையும் என்பது, அமித்ஷாவின் திட்டம் என்கிறார்கள்.
அத்தோடு பாஜக –அழகிரி- ரஜினி ஆகியோரை ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வருவது என்ற யோசனையும் அமித்ஷாவிடம் இருக்கிறது என்கிறார்கள். ரஜினிக்கு பாஜகவுடன் எவ்வளவு நல்ல நட்பு உள்ளதோ அதே நட்பு அழகிரியுடனும் இன்னும் நெருக்கம். தீபாவளியின் போது, ரஜினியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த மு.க.அழகிரி, அரசியலை பற்றி மனம் விட்டுப் பேசி உள்ளார். அதன் பிறகே அரசியல் வேண்டாம் என இதுவரை துறவறம் பூண்டிருந்த மு.க.அழகிரி, கட்சி தொடங்கும் முடிவுக்கு இசைந்துள்ளதாக கூறப்படுகிறது. மு.க.ஸ்டாலினுக்கு தகுந்தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற அழகிரி மனதிற்குள் எரிந்து கொண்டிருக்கும் கோபம்தான் இதற்கு காரணம்.
எனவே, தனிக்கட்சி தொடர்பாக வரும் 20ம் தேதி அனைத்து நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை மு.க.அழகிரி கூட்ட உள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு, புதிய கட்சி துவங்குவது குறித்த அறிவிப்பை அவர் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. கருணாநிதி திமுக என்ற கட்சியை அவர் ஆரம்பிக்க வாய்ப்புள்ளதாக, பேச்சு அடிபடுகிறது. மு.க.அழகிரி ஆலோசனை நடத்தும் அதே நாளில்தான் அமித்ஷாவும் தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். தேர்தல் வெற்றிக்கான வழிகள் குறித்து தமிழக பா.ஜ.க.வினருடன், அவர் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
தி.மு.க.வின் வெற்றியைத் தடுப்பது, ரஜினியின் ஆதரவை பெறுவது ஆகியவை அவரது பயணத்தின் முக்கிய அஜெண்டா என்று பாஜக வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. தி.மு.க.வின் வாக்கு வலிமையை சேதாரப்படுத்தினால், அது பாஜகவிற்கு ஆதாரமாகும் என்பது அவரது கணக்காக உள்ளது என்கிறார்கள். அதற்கான அமித்ஷாவின் துருப்புச்சீட்டுதான் மு.க.அழகிரி என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தமிழகப் பயணத்தின் போது நடிகர் ரஜினியையும், மத்திய அமைச்சர் அமித்ஷா சந்திக்க உள்ளார். அரசியல் கட்சி தொடங்குவதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் உள்ள ரஜினிக்கு, அமித்ஷா சில யோசனைகளை வழங்கி அதன் மூலம் தனது வழிக்கு கொண்டு வரும் திட்டமிட்டு உள்ளாராம். அமித்ஷா வருகை, ரஜினியுடன் சந்திப்பு, மு.க.அழகிரியின் ஆலோசனை என அடுத்தத்தடுத்த அரசியல் காய் நகர்த்தல்கள், மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள், ஆளும் அதிமுக மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மு.க. அழகிரி கட்சி தொடங்கினால், உறுதியாக திமுகவிற்குத்தான் பாதிப்பு.
குறிப்பாக தென் மாவட்டங்களில் திமுகவின் வெற்றியை அது கேள்விக்குறியாக்கிவிடும் என்பதை ஸ்டாலின் உணர்ந்துள்ளார். எனவே, அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று ஆலோசிப்பதற்காக, வரும் 23ஆம் தேதி திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தை ஸ்டாலின் கூட்டியுள்ளார். மொத்தத்தில், அமிஷாவின் தமிழகப் பயணம், அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது; அவர் வந்து சென்ற பிறகு என்ன மாற்றங்கள் நிகழுமோ என்பதே, அரசியல் நோக்கர்கள் ஆர்வத்துடன் உற்று நோக்கி வருகின்றனர்.