2 அமைச்சர் பதவிகள் ! முட்டி மோதும் எம்எல்ஏக்கள் ! முற்றும் கோஷ்டி பூசல் !!
தமிழகத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட மணிகண்டன் மற்றும் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பாலகிருஷ்ணா ரெட்டி என இரண்டு அமைச்சர் பதவிகள் காலியாக உள்ள நிலையில் அவற்றைப் பிடிப்பதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் பலர் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அமைச்சர் பதவியை இழந்தார். அவர் வகித்து வந்த துறைகள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வசம் ஒப்படைக்கப்பட்டன.
இதே போல் கேபிள் டிவி நிறுவனம் தொடர்பான பிரச்சனையில் மணிகண்டன் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரது துறைகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கவனித்துக் கொண்டு வருகிறார்.
தற்போது இரண்டு அமைச்சர்களுக்கு கூடுதலாக கொடுக்கப்பட்ட துறையை கைப்பற்ற அதிமுகவில் இருக்கும் சில எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று அதிமுக தலைமையை அழுத்தம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.
இதில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று நெருக்கடி கொடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதில் எடப்பாடி தனக்கு விசுவாசமாக இருக்க கூடியவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்று திட்டமிட்டுள்ளதாக அதிமுகவினரிடையே வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அதிமுகவில் மீண்டும் கோஷ்டி பூசல் அதிமாக உருவெடுத்து வருவதாக கூறப்படுகிறது.