தினகரனின் கடும் எதிர்ப்பையும் மீறி... இரட்டை இலையைக் கொடுத்து விட்டார்கள்...
டிடிவி தினகரனின் கடும் எதிர்ப்பையும் மீறி, இரட்டை இலையை அதிமுக., வேட்பாளர் மதுசூதனனுக்கு ஒதுக்கி விட்டது தேர்தல் ஆணையம்.
அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்க
டிடிவி தினகரன் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக.,வேட்பாளராகப் போட்டியிடும் மதுசூதனனின் அங்கீகாரப் படிவத்தில், ஒருவர் கையெழுத்திடுவதற்காகப் பதிலாக, இருவர் கையெழுத்திட்டிருந்தனர். இதனைச் சுட்டிக் காட்டி, மதுசூதனனுக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்று கோரி தேர்தல் அதிகாரியை முற்றுக்கையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மதுசூதனனுக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்குமாறு கோரும் அங்கீகாரப் படிவத்தில், அதிமுக.,வின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வமும், இணைஒருங்கிணைப்பாளர் என எடப்பாடி பழனிச்சாமியும் கையெழுத்திட்டிருந்தனர். இவர்கள் இவ்வாறு கையெழுத்திடும் முன்னர், தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் எழுதி, திருத்தப்பட்ட அதிமுக., விதிகளைச் சுட்டிக் காட்டி, அனுமதி கோரினர். அதன்படி, இருவரும் கையெழுத்திட தேர்தல் ஆணையமும் அனுமதி அளித்துள்ளது. இதை அடுத்தே இந்திய வரலாற்றில் முதல்முறையாக, அங்கீகாரப் படிவத்தில் இருவரும் கையெழுத்திட்டனராம்.
இந்நிலையில், தினகரன் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் தேர்தல் அதிகாரிகள் அதை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இரட்டை இலைச் சின்னத்தை அதிமுக., வின் அதிகாரபூர்வ வேட்பாளர் மதுசூதனனுக்கு வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஆர்.கே.நகரில் டி.டி.வி.தினகரனின் இன்றைய பிரசாரம் ரத்து
செய்யப்பட்டது. ஆர்.கே.நகரில் இன்று டி.டி.வி.தினகரன் பிரசாரம் மேற்கொள்வதாக இருந்தது. அவருக்கு உரிய சின்னம் ஒதுக்கப்படாததாலும், பிரச்சாரம் செய்யும் நேரம் கடந்துவிட்டதாலும் தினகரன் பிரசாரத்தை ரத்து செய்துள்ளதாகக் கூறப்பட்டது. மேலும் தினகரன் கோரியிருந்த தொப்பி சின்னம் மட்டுமல்ல, எந்த சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.