டிடிவி.தினகரனுக்கு ஜாமீன் கிடைக்குமா…? - டெல்லி கோர்ட்டில் இன்று விசாரணை
இரட்டை இலை சின்னத்துக்காக, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட டிடிவி.தினகரனின் ஜாமீன் மனு மீதான இறுதி விசாரைணை இன்று வெளியிடப்படும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, அவர்களுக்கு இடை தரகர்களாக செயல்பட்ட சுகேஷ், நத்துசிங், பாபு ஆகியோரை டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
இதையொட்டி சிறையில் இருக்கும் டிடிவி.தினகரன் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த 26 மற்றும் 29ம் தேதி நடந்தது. மனு மீதான இறுதி விசாரணை நேற்று நடப்பதாக கூறி நீதிபதி ஒத்தி வைத்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு ஜாமீன் மனுவின் இறுதி கட்ட விசாரணை வந்தது. நீதிபதி பூனம் சவுத்ரி தனது உத்தரவில், நீதிமன்றத்தில் பணிபுரியக்கூடிய நீதிபதியின் உதவியாளர் வராததால் தினகரனின் ஜாமீன் மனு மீதான இறுதி தீர்ப்பு இன்றைக்கு ஒத்திவைப்படுகிறது.
இந்த வழக்கில் கைதான ஹவாலா புரோகர் லலித்குமார் கோஷா(எ) பாபுஜிக்கு வரும் ஜூன் 3ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படுகிறது’’ என்று உத்தரவிட்டார்.
எனவே, தினகரனின் ஜாமீன் மனு மீதான உத்தரவை, இன்று மதியம் நீதிபதி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.