துபாயில் ரூ 500 கோடி பேரம் முடிந்து இரு கம்பெனிகள் இணைகின்றன… வெற்றிவேல் எம்எல்ஏ பகிரங்க குற்றச்சாட்டு…
எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணிகள் இணைப்பு குறித்த பேரம் துபாயில் முடிந்து 500 கோடி ரூபாய் செட்டில் செய்யப்பட்டுவிட்டதாகவும், தற்போது இரு அணிகள் அல்ல இரு கம்பெனிகள் இணைவதாகவும் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஓபிஎஸ் அணியின் 2 முக்கிய கோரிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஏற்றுக்கொண்டு சில அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்த அதிமுகவின் இரு அணிகளும் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகியோர் தனித்னியாக தனது ஆதரவாளர்களுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் இன்று இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இணைப்பு நடவடிக்கைகள் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களுக்கு ஆத்திரத்தை அளித்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல், ஊர் மக்களுக்கு ஒரு கிணற்றை கூட இலவசமாக தர முன்வாராதவர் ஓபிஎஸ் என குற்றம்சாட்டினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராக வாக்களித்தவர் தான் ஓபிஎ என்றும்,. இரட்டை இலை முடக்கப்பட்டதற்கும் அவரே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது பேரம் படிந்து விட்டது என்றும் துபாயில் 500 கோடி ரூபாய் பணம் செட்டில் ஆகிவிட்டது என்றும் தெரிவித்த வெற்றிவேல், தற்போது இரு கம்பெனிகள் இணைவதாக கலாய்த்தார்.
போயஸ் கார்டன் வீட்டை அரசு அபகரிப்பதை ஏற்க முடியாது என்றும் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரின் உடமைகள் அங்குதான் இருக்கிறது. அவர்களின் முகவரியும் அதுதான். அதையும் மீறி செயல்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும என வெற்றிவேல் எச்சரித்துள்ளார்.