புதன்கிழமை வேட்பாளர் பட்டியல் !! டி.டி.வி.அதிரடி !!
அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நாளை பெங்களூரு சென்று சசிகலாவை சந்திக்க உள்ளதாகவும், நாளை மறுநாள் அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இடது சாரிகள் மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்துள்ளன.
இதில் காங்கிரசுக்கு 10 தொகுதிகளும், இடது சாரிகள், விசிக கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும், திமுக 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இதே போல் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் பாஜக 5, பாமக 7, தேமுதின 4, அதிமுக 20 என போட்டியிட உள்ளன.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இந்த தேர்தலில் தில்லாக தனித்துப் போட்டியிட உள்ளது. அமமுகவுடன் எஸ்டிபிஐ கட்சி மட்டும்தான் கூட்டணி வைத்துள்ளது. அந்த கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அமமுக களம் இறங்குகிறது. இதே போல் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள 18 தொகுதிகளிலும் அமமுக உற்சாகமாக களம் இறங்குகிறது.
இந்நிலையில் அமமுக செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கினர். கூட்டத்தில் எதிர்வரும் தேர்தலை எப்படி சந்திப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நாளை தினகரன் பெங்களூரு சென்று வேட்பாளர் பட்டியலை சசிகலாவிடம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்குகிறார். இதையடுத்து நாளை மறுநாள் அமமுக வேட்பாளர் பட்டிலை வெளியிடுகிறார்.
கூட்டணியாக இல்லாமல் சிங்கிளாக களம் இறங்கும் தினகரனை அமமுக தொண்டர்கள் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுகவினர் தினகரனின் சுறுசுறுப்பு மற்றும் துணிச்சலை கண்டு அச்சமடைந்துள்ளனர்.